COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, October 31, 2009

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

உடை மாற்றி நிமிர்ந்த போது தான் கவனித்தேன், கண்ணாடியில் என் பின்னால் ஒருவன். அவனை யாரென்று தெரியாது . நான் கத்த வாய் திறந்தால் சத்தமே வரவில்லை. நான் அசையும் திசையெல்லாம் அவன் கண்கள் என்னையே பார்த்தன. அவன் முகத்தில் கண்களில் அது என்ன? கோபமா, வருத்தமா? அவன் கண்களில் ஆழம் அதிகமாயிருந்தது. அவன் ஆடை வினோதமாக இருந்தது. வெளிர்நீல நிறத்தில், அந்தக் கால ராஜாக்களின் உடை போல் உடுத்தியிருந்தாலும், பல இடங்களிலும் கிழிந்து தொங்கிக் கொண்டு இருந்தது, அவன் அதை லட்சியமே செய்யவில்லை....

பயத்தில் என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது இன்னும். "சுமா" என்று ராஜாமணியின் குரல் கேட்டு தலை திருப்பினேன், அந்த வினாடியில் அந்த நீல ராஜகுமாரன் காணாமல் போனான். ராஜாமணி குளியலறை வாசலில் நின்று, "நான் ஆஃபீஸ் கிளம்பிட்டேன், நீ கிளம்பலையா? ம், சாயந்திரம் சேகர் வீட்டுக்கு போறோமா?" என்று இரைந்து கேட்டான். என் ராஜாமணியின் அலுவலகமும் என்னுடையதும் ஒவ்வொரு திசையில். குளியலறைக் கண்ணாடியில் நான் திரும்பிப் பார்த்தபோது யாரும் இல்லை, நடுங்கிக் கொண்டிருந்த நான் "ம்" என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, ராஜாமணி, "சரி, எனக்கு லேட்டாச்சு, பை!" என்றதும் அபார்ட்மென்ட் கதவை அறைந்து சாத்தியதும் கேட்டது.

நடுங்கிக் கொண்டே எனக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே, கிளம்பினேன். செல்பேசியை எடுத்து ராஜாமணியை கூப்பிட்டால், செல்பேசி கர்கர் என்று சத்தம் போட்டது. கைப்பையை எடுத்துக் கொண்டு காருக்கு ஓடினேன். எப்பவும் என்னைப் பார்த்தால் பேசும் கீழ் அபார்ட்மென்ட் ஜான், "ஹேய், ஆர் யூ இன் அ ஹர்ரி?" என்றான். "யப், ஸீ யூ லேடர்" என்றவாறே, காருக்குள் அமர்ந்தேன்.

எனக்கும் ராஜாமணிக்கும் இந்தியாவில் திருமணம் ஆகி இரண்டு வாரங்களே ஆகி இருந்தன. ந்யூயார்க்கில் பல முறை வந்து பணியில் இருந்தமையால், என் வீட்டினர் அமெரிக்க மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்த போது எனக்கு நிம்மதி ஆகவே இருந்தது. இந்தியாவில் என்றால், சும்மா விட்டு விட மாட்டார்கள். 'தலைமுடி இப்படி வளத்துக்கோ,  இதை ஏன் சாப்பிடறே' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொன்று விடுவார்கள்.

ஆனால் என்ன, ந்யூயார்க்கில் என் அத்தையின் ந்யூஜெர்ஸி வீட்டில் இருந்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஏற்கனவே ட்ரைவிங் நன்றாகப் பழகியிருந்தாலும், புதுமண வாழ்க்கை என்பது, உறவினர்கள் இல்லாமல், புதிய ஆணோடு குடும்பம் நடத்துவது என்பது - புதிய அனுபவம் தான். "எப்பிட்ரீ இவ்ளோ ஜோக் அடிச்சிட்டு ஸ்பங்கி மங்கியா இருக்கே" என்று கொஞ்சும் கணவன்...! ராஜாமணி யோசித்துப் பேசுபவன், நான் அப்படி இல்லை. ராஜாமணிக்குக் கோபம் வந்தாற் போலவே தெரியவில்லை. ஆனாலும், இந்தியாவில் என் பெற்றோரை ஃபோனில் கூப்பிடும் போதெல்லாம், ராஜாமணி கூடவே இருந்ததால் என் பெற்றோரிடம் தனியாகப் பேசவே வாய்ப்பு கிடைக்கவில்லை.

காரை ரிவர்ஸ் செய்ய கண்ணாடியில் பார்த்த போது தான், ரேயர் வ்யூ மிரர் இல், திரும்பவும் காலையில் வந்த‌ நீல ராஜகுமாரன். நீலப் பல்லைக் காட்டிச் சிரித்தான். ஏதோ சொன்னான். "என்னோடு பேச மாட்டியா" என்று தான் சொன்னான் என்று நினைக்கிறேன், அவன் பேசும் போது தான் அவன் மூச்சு கர்கர் - செல்பேசியில் கேட்ட அதே கர்கர் - என்று கேட்டது. அவன் எந்த மொழியில் பேசினான் என்று நினைவில்லை. தமிழ் போல இருந்தது. சடாரென்று ப்ரேக் போட்டேன். கார் டயர் விர்ரென்றதும் புகை பறந்ததும் தெரிந்த போது, செல்ஃபோன் அடித்தது, ராஜாமணியின் நம்பர். டாக் பட்டனை ப்ரஸ் செய்து, ஸ்பீக்கரில் போட்டேன். ராஜாமணி "ஹாய் ஸ்லீப்பி ஹெட்" என்றதும், பின்னாலிருந்தவன் காணாமல் போனான்.

"கீப் டாகிங்" என்றவாறே காரை ரிவர்ஸ் எடுத்து ட்ரைவினேன். "ஐ, என் குரல் அவ்வளோ இனிக்கிறதா?" என்றான் ராஜாமணி.

"எனக்கு பயமா இருக்கு ராஜ்" காரை ஓட்டியவாறே பேசினேன். குறிப்பாக ரெயர் வ்யூ மிரர் பார்க்காமல் இருக்க தவித்து விட்டேன்.

"என்ன பயம்?" என்றான் ராஜாமணி.

"என்னவோ தெரியல. காலையிலிருந்து அமானுஷ்யமா ஏதோ ஒரு உருவம் பாக்கிறேன். என்னன்னு சொல்லத் தெரியல. பயமா இருக்கு", என்றேன் நான்.

"என்னம்மா சொல்ற? ஸிக் லீவ் போட்டுட்டு வீட்டுக்குப் போ. நானும் வரேன்" - இது ராஜாமணி.

"இல்லப்பா, எனக்குத் திரும்பிப் போக பயமா இருக்கு. அதுவும் புது ப்ராஜக்ட்ங்கிறதால், டக்னு இதுக்கெல்லாம் லீவு போட வேணாம்னு பாக்கிறேன்.... ம், ஜான் யங் நினைவிருக்கா?"

"யாரது புது காதலன்?"

"அட, சீ. கீழ் வீட்டு பார்ட்டி. வெள்ளைக்கார தாத்தா. இந்த அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ் பத்தி பயங்கரக் கதை சொன்னாரு நேத்திக்கு... பேய் கீய்னு.." - இது நான்.

"ஆமா, இதெல்லாம் கேட்டு நடுங்கு. கிறுக்குடி நீ! சரி, நீ எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணு... ஏன் முன்னாலியே ஃபோன் செஞ்சிருக்கலாம்ல?"

செல்பேசி காலையில் தொந்தரவு செய்தது பற்றி ஏதாவது சொன்னால் நம்ப மாட்டான் என்று தோன்றியது. "சரி, எதுனாலும் டெக்ஸ்ட் பண்றேன்", என்றேன். திடீரென் ஒரு யோசனை தோன்றியது, "ஹனி, ஒரு உதவி பண்ணேன்" என்றேன்.

"என்னடி?" டி போட்டால், தலைவர் மசிந்து வழிக்கு வருகிறார் என்று தெரியும்.
"ம், நேத்திக்கு ஒரு கவிதை எழுதினியே என்னைப் பத்தி, அது சொல்லேன்", என்றேன். செல்பேசியின் ரெகார்டரைத் தொடங்கிக் கொண்டேன்.

******************************************************************************************************************************************************************************

அன்று மாலையும் மறு நாள் காலையும் நான் தனித்திருந்த போதெல்லாம் அந்த அழுக்கன், பேயோ என்னவோ, என்னைத் தொடர்ந்தது. மறுநாள் சனிக்கிழமை என்பதால், ராஜாமணியை, காலை10 மணிவாக்கில் "ப்ரஞ்ச்" மாதிரி வெளியே சாப்பிடுவோம் என்று கிளப்பினேன். நடப்பதை எல்லாம் விவரித்தேன்.

ராஜாமணி பயந்து போயிருந்தது அவன் அழகிய கண்களில் தெரிந்தது. எப்பவும் போல், என்ன செய்யலாம் என்ற யோசனையைத் தொடங்கினான். "சுமா, என்னடா சொல்றே? இன்னிக்கு ஹோட்டல் போயிடுவோமா? ஏதாச்சும் டாக்டர் கிட்ட போகணும்னா எமர்ஜன்ஸிக்கு தானே கூட்டிட்டுப் போக முடியும்? இன்னிக்கு சனிக்கிழமை வேற. எனக்குத் தெரிஞ்ச டாக்டர் யாரும் ஆஃபீஸ் திறந்திருக்க மாட்டாங்களே.... உனக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் உங்க ஆஃபீஸ்ல தொடங்கிட்டாங்களா? எனக்கு ஹெச்1 விசா கொடுத்த கம்பெனியில் உனக்கு ஹெல்த் அப்ளை பண்ணியிருக்கேன், ஹெச். ஆர். பிடுங்கி இன்னும் ப்ராசஸ் பண்ணலை...." அவன் பயம், நிதர்சனங்களின் பயம் ஆக இருந்தது.

எனக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. ராஜாமணி, "இரு ரிலையன்ஸ் கார்டு நம்பர் வச்சிருக்கியா, எங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணிக் கேக்கிறேன், ரமணி அத்தை மகன் ஃப்ளோரிடாவில டாக்டரா இருக்கான், அவனை வேண்ணா கூப்பிட்டு கேக்கலாம். அவன் நம்பர் இல்ல... அப்பாவுக்கு தெரியுமோ என்னவோ?"

என் கைப்பையை எடுத்து, ரிலையன்ஸ் நம்பரை எழுதிய ஸ்டிக்கிநோட்டை எடுத்தேன். நிமிர்ந்தால், எதிரில் நீல ராஜகுமாரன். திரும்பவும். ராஜாமணி பக்கத்தில் இருந்த போதும். ராஜாமணி பேசிக்கொண்டிருந்த போதும். என்மேலிருந்த கண் வாங்காமல்.

ராஜாமணி, ஃபோனை மூடியவாறே, "அப்பா எங்கியோ வெளியில போயிருக்காரு போல" என்று என்னைத் திரும்பிப் பார்த்தவன் கண்களில் பயங்கரம் தெரிந்தது. "சுமா, உன் கண் நிலைகுத்துதடி, என்னடி ஆச்சு?"

******************************************************************************************************************************************************************************

நான் கண் திறந்த் போது எமர்ஜென்ஸி அறையில் இருந்தேன். இன்ஷூரன்ஸ் இல்லாமல் எமர்ஜென்ஸி கூட்டி வந்ததற்காக தீட்டப் போகிறார்கள். வெளியே, ராஜாமணி ஃபோனில் கதறுவது தெரிந்தது. அந்த அழுக்கு, நீல ராஜகுமாரப் பேய் டாக்டருக்குப் பின்னால் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். நான் புன்னகைத்துக் கொண்டேன். புன்னகைத்த அந்த நிமிடத்தில், பெரும் அமைதி என்னிடம். அழுக்கன் என்னை நோக்கி வந்தான். 

வெளியே: ராஜாமணி மாமனாருடன் ஃபோனில், "சார்... மாமா, என்ன சொல்றீங்க? ஜான் யங்குங்கிற பேர்ல எங்க அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்ல யாரும் இல்லன்னு சொல்றாரு அபார்ட்மென்ட் மானேஜர், சுமா தனக்குத் தானே பேசிட்டுப் போவா-னு வேற சொல்லிச் சிரிக்கிறாரு... என்னது? மருந்து கொண்டு வர மறந்துட்டாளா? ...... அவளுக்கு பைபோலார் டிஸ் ஆர்டர் வியாதி இருக்குன்னு சொல்லாம மறைச்சிட்டு.....". நச்!

Friday, September 18, 2009

கடிகாரத்தில் முகம் பார்த்து

சாயம் கலைந்திருக்கிறேன்.
என் கண் மை கலைந்து,
கைப்பையின் கண்ணாடிக்குள்
அடக்க முடியாத
மாற்றம்.

தெளித்துத் தரையில் விழுந்த‌
மழை நீராய்க் காணாமல்
போனது காலம்.

மேல் கிளையிலிருந்து விழுந்து
இனி காயப் போகும் சருகுக்கும்,
நேற்று வாங்கிய‌ பூவிலிருந்து
தரையில் உதிரும் மகரந்தத்துக்கும்
என்னைத் தெரிந்திருக்கும்.

குடித்துப் போட்ட பாட்டிலையும்
வெந்த கிழங்கின் தோலையும் போல்
என்னைப் பார்த்துச்
சிரித்துக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.

Monday, July 20, 2009

வழுவல, கால வகை

நாலுகால் மண்டபம் வரப்போவுது. ஆனா, அப்பய்யா அதுக்குள்ளாற என் தோளைப் பிடிச்சு அமுக்குறாரு. அவரு கையில கோல் வச்சிட்டு இருப்பாரு. ஆனாலும் அப்பய்யாவுக்கு பயம் தான். என் தோளைப் பிடிச்சிட்டு தான் நடப்பாரு.

"அப்பய்யா, வலிக்குது, தோள விடுங்க".

"இல்லடி, வுழுந்துடுவேன்னு பயந்தான்". ஒரு நிமிசம் தோளை விட்டாலும், இந்த இளவெடுத்த மண்டபம் வரப்போ, அப்பய்யாவுக்கு கைகாலெல்லாம் ஒதறிடும், என் தோளைப் பிடிச்சிட்டு, கோலை இன்னொரு கையால இழுத்துகிட்டே நடக்குறாரு. அவருக்கு ஒரு காலு வெளங்காது, இழுத்து இழுத்து தான் நடப்பாரு. கூனு விழுந்து, காலு வெளங்காம, சவரஞ் செய்யாத முகம் தான் அப்பய்யாவுக்கு. என் ஸ்கூலு ஃப்ரண்ட்ஸ்க்கு எல்லாம் கிண்டல் தான். "உங்கப்பாரு இம்புட்டு சீக்காளியானப்புறம் ஏன் கல்யாண‌ம் கட்டிகிட்டாரு?"

நான் ஒரே பொண்ணு, மனசில பட்டத பட்பட்னு கேட்டுருவேன்னு அப்பய்யாவுக்கு ஒரே சந்தோசம் தான். அஞ்சு வயசில கைய பிடிச்சிட்டுப் ஊரெல்லாம் போவம்ல! எல்லாருட்டயும் வாயக் கொடுத்து வம்பு வளத்துவேன், எங்க அப்பய்யா சிரிச்சுக்குவாங்க. நேத்து கூட ஸ்கூல்ல என் டீச்சரு ஒருத்தங்க அவங்க புள்ளய விட நான் நல்லா மார்க் வாங்கிட்டேன்னு மனசுல வச்சிட்டு, பளார்னு அறைஞ்சிட்டாங்க. ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போயிட்டேன், இன்னும் அடி வாங்கிட்டு வந்தேன். அதப்பத்தி அப்பய்யா கிட்ட சொன்னதுக்கு, "மனசுல பட்டத கேக்குற ராசாத்தி, ஆனா, அக்குரமம் செய்யுறவங்க‌ கிட்ட‌ சாக்கிரதையா இரும்மா. ஒனக்குத் தெரியாதது இல்ல"ன்னுட்டே நடந்தாரு அப்பய்யா.

ஒரு கெழவி, ஊருக்குப் புதுசு போல, "ஏம்மா, அவரு பாவம் நடக்க முடியல, நீ பறக்கறயே, மெள்ள நட தாயி"ன்னுட்ட்டு போச்சு. அதுக்கு என்னா தெரியும்? அப்பய்யா தோளப் போட்டு அமுக்குறது!

மண்டபம் வந்திருச்சு. அப்பய்யா, "பாருடி, நான் கட்டின பூங்கா இது. காந்தி சிலை பாத்தியா? அதுல எம்புட்டு அளகா அவரைப் பத்தி கல்வெட்டுல எளுதி வச்சிருக்கேன். ஒரு நாள் இந்த இடத்துல பிள்ளங்க விளையாடணும், லைபரி கட்டணுமடி".

அதெல்லாஞ் சரி, இன்னிக்கு சாப்பாட்டுக்கு வழி இல்ல, லைபரி யாரு கட்டுவாங்க? அப்பய்யா சிறிசா எளங்காளையா இருக்கச்சொல்ல‌ கட்டினாராம்ல. பெரிய பூங்கா தான். எப்பனாச்சும் கூலி வேல செஞ்சு வயத்தக் கழுவிட்டு, வேற‌ காசு சேக்காம இருந்துட்டாரு அப்பய்யா. காலு வெளங்காமப் போகக்காட்டியும், எங்க அம்மாவ‌ எங்கிட்டிருந்தோ கூட்டிகிட்டு வந்திட்டாராம். எல்லாம் அப்பய்யாவுக்கு தம்பி மொற ஒரு சேக்காளி - நான் சித்தப்பான்னு கூப்பிடுவேன் - சொல்லித் தான் தெரியும். அம்மா ஒண்ணுஞ் சொல்லாது. சோத்துக்கு இல்லன்னுட்டு அப்பப்ப ஓரமா நின்னுட்டு அழுவும். தல தல யா அடிச்சிட்டு சத்தம் போடாம அழுவும், தனியா ஒக்காந்து தெலுங்கு பேசிட்டிருக்கும். பாவம். ஆனா, எங்கிட்ட‌ ஒண்ணுஞ் சொல்லாது.
***********************************************

அது கெடக்கு 20 வருச பழய கதை, கழுதை. அமெரிக்காவுல இருந்து ஊருக்கு வ்ந்திருக்கேன். அப்பய்யாவுக்கு கருமாதி. அப்பவும் கூட, என்னோட க்ராப் தலையும், மஞ்சளும் ப்ரவுனுமா டை அடிச்ச தலையும் பாத்துட்டு செல்வியோட ஆயா சிரிச்சு, "ஏன்டி, அப்பன் மொவம் பாக்க‌ வரலியேடி"ன்னுட்டு தான் என்னை வரவேத்தது.

என்னைய, கருமாதிக்கும் வராதேன்னு தானே அப்பய்யா உசிரோட இருக்கப்பவே சொன்னாங்க. ஏன் அப்பய்யா அப்படி சொன்னாங்கன்னு கேக்கறீங்களா? அப்பய்யா உசிரோட இருக்கச் சொல்ல‌, எனக்கு 14 வயசிருக்கும்; நான் அப்பய்யா கிட்ட‌ கேட்டது இது தான்: "உன் வெளங்காத காலுக்கு துணை வேணுமுனு தானே எங்க அம்மாவை கட்டிகிட்டே? என்னைப் பெத்துப் போடாம இருந்திருக்கலாமே? என்னை ஏன் பெத்தே?"

அம்மா கூட அன்னைக்கு ஒண்ணும் பேசலயே. பக்கத்து ஊட்டு செல்வி (அப்ப அது சின்னப் புள்ள), "ஏண்டி, இனும தாவணி போடணும்னு உங்கப்பா சொன்னதுக்கா இந்த கேள்வி கேட்ட?"ன்னு அப்புறமா ரகசியமா கேட்டுச்சு. இல்லியே! செல்விக்கு நான் சொன்னாலும் விளங்காது. நான் சைக்கிள் ஓட்டக்கூடாதுன்னு அப்பய்யா ஒத்தக்கால்ல (அவங்களுக்கு ஒத்தக் கால் தானே!) நின்னாங்க. அதுல வளந்த சண்டைல தான், நான் அப்படி கேட்டேன். ஏன் என்னைய சைக்கிள் ஓட்டக் கூடாதுன்னு அப்பய்யா சொன்னாருன்னு எனக்கு விளங்கிடுச்சி.

தாவணி போட்டாலும், ஸ்கூல்ல பஸ்ட்டு மார்க்கு வாங்கினாலும், எங்க குடும்பத்துல இல்லாத முறையா, 'அமெரிக்கா போவேன் அங்க‌ பான்ட் சட்டை தான் போடுவேன்'னு என் அம்மாகிட்ட ரகசியமா சொன்னாலும், நான் நான் தான். மனசுல பட்டத கேக்கத் தான் கேப்பேன். அப்ப வளந்த சண்டையில‌ சொன்னாரு அப்பய்யா, தன் கருமாதிக்கு வராதேன்னிட்டு.

ம், சொல்ல மறந்துட்டேனே, அப்பையா கையால கட்டின பூங்கா பக்கத்துல இருந்த‌ நாலுகால் மண்டபம் இடிஞ்சுடுச்சி, போன வருசம் அங்க நல்லா கட்டிடம் கட்டி கவர்ன்மென்டு லைப்ரரி தொடங்கியிருக்காங்க.... நான் தான் கலெக்டர் வரைக்கும் போய், தள்ள வேண்டியதைத் தள்ளியிருக்கேனே!

கருமாதி முடிஞ்சிடுச்சி. அம்மா ஒரு வருசம் இங்கயே இருந்துட்டு அப்பால அமெரிக்கா கிளம்பி வரேன்னிடுச்சு. இன்னிக்குக் காலையிலே, நான் முடி சீவிட்டிருந்தேன். அம்மா நைசா வந்து தன் தலையில டை அடிக்கட்டுமான்னுது.

Tuesday, May 12, 2009

மக்களே, ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க!

இந்தியத் தேர்தல் விதிகளின் படி, “எனக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை, ஆனால், என் பேரில் கள்ள ஓட்டு விழுவதைத் தடுக்க விரும்புகிறேன்”னு சொல்லறது 49-ஒ (1). இது பத்தி ஞாநி ("ஒரு வேட்பாளரையும் பிடிக்காட்டி 49ஓ போடு, எப்படியும் ஓட்டு போடு" அப்படின்றாரு) புண்ணியத்தில நிறைய பேரு எழுதியிருக்காங்க. இன்றைய தேதியில் 49ஓ படி ஓட்டுப் போடாம நம்ம கடுப்பைக் காட்டிட்டு வர்றதுன்னால யாருக்கு லாபம்? அரசியல்வாதிகளுக்குத் தான்! நீங்க ஞாநியுடைய ஒரிஜினல் வாதம் பாத்தீங்கன்னா, 49ஓ போட்டால், அதே வேட்பாளர்கள் திரும்பி அடுத்த முறை தேர்தல்ல நிக்க மாட்டாங்க (நிறுத்தப்பட மாட்டாங்க?) என்று சொல்றாரு. ஏங்க, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரெல்லாம் தேர்தல்ல நிக்கறாங்க!!!

49ஓவினால, யாருக்கு ஓட்டுப் போடறோம்/போடலைங்கிற ரகசியம் ஒடைஞ்சுடுது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டுமுறை நம்முடைய வோட்டு முறையை மாற்றக் கோரியிருக்கிறது. தேர்தல் வோட்டு போடும்போது "மேற்கூறியவர்களுக்கு வோட்டளிக்க
விருப்பமில்லை" ன்னு கூட மக்கள் வோட்டிட வழி செய்யணுமாம். இன்னும் இது சட்டமாகலை.(2). இதுபத்தி எழுதினா, உ.த.பதிவுமாதிரி நீளமாயிடும் (அவர் பதவி காலியாயிட்டிருக்காம்ல!)

குண்டுக்கல் மாவட்டத்தில வோட்டுப்பட்டியில் கதைத்தேர்தல் நடந்ததுன்னு வச்சுக்குவோம்; அ) சாதியான் ஆ) துட்டான் இ) ரெண்டுங்கெட்டான்னு மூணு பேரு போட்டியிடறாங்க. 1000 பேர் வோட்டு போட்டாங்க (மிச்சம் பேர் சினிமாவுக்குப் போனாங்க). 1000 பேர்ல 900 பேர் (அவிங்க 900 பேரும் "வோட்டுப்பட்டி ஞாநி" கல்லூரி முதுகலை மாணவர்கள்), பூத் ஆபிசர் கையைக் காலைப் பிடிச்சி, கடைசியில் மிரட்டி போராடி (3) 49ஓ மூலமா வோட்டு போட விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க. இந்த நூறு பேரு போட்ட வோட்டுல ரெண்டுங்கெட்டான் ஜெயிச்சாரு. ஞாநி சொல்வது என்னா: இவ்வளவு பேரு ஓட்டு போடலைன்னு கட்சிகளுக்கு தெரியுமாம். கறி பிரியாணி செலவு 100 பேருக்குத் தானே?

49ஓவை பெரும்பான்மை (100% என்பது இயலாது!) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா? பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு எதிர்பார்த்த செலவு 818கோடி. தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில! தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி. வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது? தேர்தல் போது, எந்தத் தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க. அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் "ஆதரவாளர்கள்", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் தான்! எல்லா நாடுகளிலும் தேர்தல் ஊழல்கள், லஞ்சம் எல்லாம் உண்டு. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தொழிலதிபர்ங்கற ரீதியில் டொனேஷன் கேட்டு ஃபோன்கால் வந்தது, இது சகஜம்!!

உருப்படியா இரண்டு யோசனைகள் (நடைமுறைச் சிக்கல்கள் உண்டு):
1. ஓட்டுப் போடுவது சில நாடுகளில் கட்டாயம் (சுட்டியில இதுக்கான வாத/எதிர்வாதங்கள் இருக்கு). அதுபோல், திண்மையுள்ள இந்தியக் குடிமக்கள் எல்லாரும் வோட்டுப் போடணும்னு ஒரு சட்டம் வேணும். அட்லீஸ்ட், வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்களுக்கு தபால் ஓட்டுப் போடுவதை வழிமுறைப் படுத்தலாம் இல்லையா? படிச்சவங்க குறைவா ஓட்டுப் போடறாங்களாம் (4). பத்தாவது முடிச்சவங்க ஓட்டுப் போடலைன்னா, ரூ.10,000 வரை தண்டம் கட்டணும்னு வைக்கலாமே, அடுத்த எலக்‌ஷனுக்காவது பணம் சேரும்.

2. நாட்டைத் திருத்த இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் குழுவா அமைச்சு தேர்தலுக்கு நிக்கலாம். (அருண்குமார் பதிவில எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சி பற்றி எழுதியிருக்காரு). தேர்தலில் வென்றவர்களுக்கு சட்டத்துக்கு மீறி வருமானம்/இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்தால், வென்றவர் பதவி துறக்கணும்னு அந்த குழு கறாரா நடைமுறைப்படுத்தணும்.

ஒவ்வொரு இந்தியத் தேர்தலும்போதும் வந்து 49ஓ போடுன்னு சொல்லாம, இடைப்பட்ட நேரத்துல நல்ல வேட்பாளர்களை உருவாக்கப் பாக்கணும். வேட்பாளர்களுக்கு வோட்டு போட விருப்பமில்லை என்பது, சனநாயக அடிப்படைக்கு எதிராகவா என்றும் ஒரு கேள்வி இருக்கு. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல்ல மக்கள் பங்கேற்கணும் (அய்யோ சிரிக்காதீங்க;-( குறிப்பிட்ட நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், தேர்தலுக்குப் பின்னரே கட்சிக்கு டொனேஷன் தருவோம்னு மக்கள் உறுதி தர்றதுன்னு கூட வழிகள் இருக்கு. ஓ-போடு இயக்கத்தில், படிச்சவங்களை டார்கெட் செய்யறாங்க; படிக்காதவங்க ஓட்டு போடுறது எதுக்குன்னு முதல்ல புரிஞ்சுக்கணும். அட்லீஸ்ட் நம்மூரில் இருக்கிற சட்டங்களை அமல்படுத்துவதிலும் சட்டங்களைப் பற்றின உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும் தான் நம்மைப் போன்ற படித்த ஞாநிகள் ஒத்துழைக்க வேண்டும்.

தரவு/சுட்டிகள்:
1. இந்தியத்தேர்தல் விதிகள் இங்கே.
2. தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகள் இங்கே.
3. தேர்தல்களில் 49ஓ போடுவதில் பதிவர்கள் பட்ட நடைமுறைச் சிரமங்கள்: வித்யா, ஊர்சுற்றி, அருண்குமார்.
4. பத்ரி சார் பதிவிலே கிராமத்தை விட பெரிய நகரங்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவுன்னு விழுக்காட்டோட!




மீள்பதிவு!

Friday, April 24, 2009

கைப்பை பற்றியதல்ல‌

அப்பவும் இப்பவும்
கண்மை வளர்க்கவும், அடையாளங்கள் தொடுக்கவும்,
என் கைப்பையில் பலவும் உண்டு.

எப்போதோ காதல் தருணத்தில்,
அழகின் சின்னமான கைப்பை.
"என்ன ரகசியம் வச்சிருக்கே
இந்த கைப்பையில்?"

இன்றைக்கு
குழந்தைக்குப் பிடித்த தின்பண்டம் மட்டுமல்ல,
அவன் தின்று போட்ட இனிப்பும்
ஒட்டிக் கொண்டு....
"அம்மா பையில வச்சிடு"

நாளைக்கு, கைப்பையில்
அவருக்கும் எனக்குமாய்
மருந்தும் இருக்கலாம்;
கண்மை கைப்பையில் இருந்து
காணாமல் போகலாம்.

வெவ்வேறு நிறங்களில், விதங்களில்
கைப்பை மட்டும் வரும்
அப்பவும் இப்பவும்.

Friday, April 10, 2009

50வது பதிவு: பெண் பொறியியலாளர் / பதிவர்களின் பிரச்னைகள்

பெண் பதிவர்களுக்கு - கணிணி சார்ந்த பதிவர்களோ, இல்லை எதுவானாலும் - இந்த தொல்லை தாங்க. உலகம் முழுக்க!!!!

வெள்ளி காலை நான் படிக்கும் ஒரு கணிணி இதழில் வந்த கார்ட்டூன் இது. ஒரு பெண் பதிவர் ஒரு செய்தியைச் சொன்னால், அந்த செய்தியை விட அந்தம்மா "என்னா ஃபிகர்" என்று கவலைப்பட ஒரு கூட்டம் இருக்கு.... இருக்காம்!!!



இந்த மாதிரி இல்லாத உங்களைப் போன்ற‌ நல்ல பதிவர்களுக்கு மொழியாக்கம் தேவையில்லை என்பதால, தமிழ்ல கொடுக்கலை.

:-)

_/\_ நன்றி/Thanks To: http://www.xkcd.com/322/ _/\_

புரியாத பெண்கள் - 3

இந்த வாரம் ஒரு சில தோழிகளின் அனுபவ, மற்றும் கருத்துக்களின் கலவைத் தொகுப்பாக ஒரு கற்பனைப் படைப்பு.

புரியாத பெண்கள் - 1
புரியாத பெண்கள் - 2

எங்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பெர்ட் (நாய்) 'ரின்டே'வை அதன் காலைக் கடன்களுக்காக நான் கூட்டிக் கொண்டு வெளியே சென்ற போது, பூஜா ஒரு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்து “ஹாய்” என்று தொடங்கியது எங்கள் அறிமுகம் ('ரின்டே'வை நான் நாய் என்று சொன்னது என் கணவர் ராஜாமணிக்கு தெரிந்தால், அவ்வளவு தான்:-).

பூஜாவுக்கு இரண்டு மகன்கள், 3வயசு & 5வயசில். என் குழந்தைகள் சிறிது பெரியவர்கள் என்றாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எங்க நட்பு கொஞ்சம் மெதுவா வளர்ந்தது.... என் பிள்ளை கண்ணன் அந்த பசங்களைப் பார்த்தாலே நிண்டெண்டோ விளையாட்டு சாமான்களை அவசரமாய் மறைத்து வைப்பான். பூஜாவின் குழந்தைகள் பேப்பரைக் கிழித்து சிறுசிறு துகள்களாய்ப் போடுவது, விளையாட்டுப் பொருட்களை உடைத்து வைப்பதுன்னு நிறைய சேதம் செய்து கொண்டிருந்தார்கள். பூஜா தன் பிள்ளைகளைக் கண்டிக்காமலும், சுத்தம் செய்யாமலும் கூட்டிக் கொண்டு போய் விடுவாள்.

பூஜாவின் கணவன் வேறு, அவ்வப்போ, “உங்க வீடு எங்க வீட்டை விடச் சின்னதோ?”, “உங்க வீட்டு பழைய ஓனர் சுருட்டு பிடிச்சிருப்பாரோ?”, “உங்க வீட்டு சோஃபா மாதிரியே எங்க கிட்ட இருந்தது, அசிங்கமாயிருக்குன்னு போன வருஷம் தான் தூக்கி எறிந்தோம்” என்றெல்லாம் ஊக்கத்தோடு பேசிக் கொண்டிருப்பார்:-)

பூஜா, "செயின்ட் லூயிஸ்" நகரத்துக்கு ஒரு வார இறுதிப் பயணம் போயிட்டு வரலாம்னு சொன்னதால‌, எல்லாருமா போனோம். ஊர்ச் சுற்றி விட்டு சனி இரவு அன்று, சாப்பிட்டு முடித்தபின் நாங்கள் - பூஜா, அவள் கணவர் சூர்யா, நான், ராஜாமணி - வாடகைக்கு எடுத்திருந்த டவுன்ஹவுஸில் வெட்டிப் பேச்சுக்காக அமர்ந்தோம். நாள் முழுக்க போட்ட ஆட்டத்தில், குழந்தைகள் எல்லாருமே தூங்கி விட்டிருந்தனர். அப்போது, கோடிக் கணக்கில் மதிப்புள்ள வீடுகள் அடையாறிலும் தஞ்சையிலும் தங்களுக்கு சொந்தம் என்று பூஜா சொன்னாள். எனக்கு அது புது நியூஸ்.

“கடவுள் நம்பிக்கை இருக்கா?” என்று பூஜாவின் கணவர் சூர்யா தொடங்கினார்.

“இல்லைன்னு சொல்ல மாட்டேன்... நம்மை மீறின சக்திக்கு, அது மக்களின் சக்தியாகவே இருக்கலாம், அதை கடவுள்னு சொல்லுவதில் தப்பு என்ன‌?” என்று சிரித்தேன் நான். மனிதர்களே கடவுள், அதுனால உருவ வழிபாட்டுல தப்பு இல்ல என்பது என் கட்சி. ராஜாமணி தீவிர அனுமான் பக்தர். பேசாமல் சிரித்த ராஜாமணியைப் பார்த்து நான் ஒரு புன்முறுவல் கொடுத்தேன்.

“கடவுள்னா யாரு? நம் உருவகம் தானே? மதம் மக்களைக் கட்டிப் போடத் தானே பிறந்தது?” இது பூஜா.

“கடவுள் நம்பிக்கை நமக்கு ஒத்து வந்தால் அதை பின்பற்றலாம் - மனுசங்க, மிருகங்களுக்கு தொல்லை இல்லாத பட்சத்தில்! கணக்கு, அறிவியல்னு எல்லாத்துக்கும் கட்டமைப்பு இருக்கறதுனால, மதம் இருப்பதில் தப்பு இல்லை - அது யாரையும் ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. எதுவானாலும் ஒரு உயிர் இன்னொரு உயிரை விடத் தாழ்வுன்னு சொல்லவே கூடாது” என்று நான் சொன்னேன்.

“திரௌபதிக்கு எத்தனை கணவர்கள்? க்ருஷ்ண அவதாரத்தில் எத்தனை மனைவிகள்? யப்பா! இதெல்லாம் சரியா?” என்றாள் பூஜா. இன்னும் மேலோட்டமாக நிறைய புராண கேள்விகள் சூர்யா கேட்டார். இப்ப யோசித்தால், இதே வரிகளைச் சொல்லித் தான் அவங்க எல்லாரிடமும் மார்க்கட்டிங் தொடங்கியிருப்பாங்கன்னு நல்லா புரியுது.

பேச்சு திசை மாற, மாற, ஒரு வழியாய், பூஜா விஷயத்துக்கு வந்தாள். ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து , “ஸ்ரீஅப்பன் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று ராஜாமணிக்கு அருகில் அமர்ந்தாள்.

“உங்க வீட்டு கெட்-டுகேதர்ல ஸ்ரீஅப்பன் படம் பாத்திருக்கேன். அவரைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே” - இது ராஜாமணி. தமிழ் இணையத்தில் மூழ்கி முத்தெடுத்த எனக்கு ஸ்ரீஅப்பன் பற்றி நன்றாகவே தெரியும். பெயர் பெற்ற “குருஜி”. ஓரிரு கொலை வழக்கில் மாட்டினார், கொலை வழக்குகளும் மாண்டு போயின. இப்ப பக்தி மார்க்கம் பற்றி சிடிக்கள் நிறைய வெளியிடுகிறார், மார்க்கெட் போன பல இந்திய பிரபலங்களுக்கு அருள் பாலிக்கிறார், ஸ்ரீஅப்பன் விடியோக்களில் அவர் தலையைச் சுற்றி ஒரு வெளிச்சம் தானாய் உண்டாகிறது... இப்படி எனக்கு நிறையவே தெரியும், ராஜாமணிக்கு என்னை மாதிரி வம்பு தெரியாது:-)

ஸ்ரீஅப்பன் பற்றி, தலையைச் சாய்த்து கண்கள் படபடக்க தலைமுடியைச் சுருட்டிச் சுருட்டி, பூஜா சொன்னது அதிகம். அவர் பிறந்த அன்றே காக்கை கூவியது, மயில் அகவியது, ஆமை அலறியது. அவர் பள்ளிக்குப் போய் தனக்குப் பாடம் சொல்ல வந்த‌ வாத்தியாருக்கெல்லாம் பாடம் எடுத்தார். இறைவன் அவருடைய கண் முன்னே இரண்டு முறை வந்து ‘உலகை மாற்று’ என்று ஆணை இட்டார். முதல் முறை கேளாமல் இருந்தாலும், ஸ்ரீஅப்பன் இரண்டாம் முறை தம் ஆன்மிகப்பயணம் தொடங்கினார். ‘ஓஹோ அதுனால தான் அவரு ரெண்டு முறை கண்ணாலம் கட்டிகிட்டாரு’ என்று கேட்க நினைத்து, “அவர் கல்யாணம் ஆனவர்ல?” என்றேன் நான்.

திரும்பி என் கண்களைச் சந்தித்த பூஜா, “கல்யாணம் செய்யாத ரிஷிபுங்கவர்கள் கிட்ட பிள்ளைங்களைப் படிக்க யாரும் நம்பி அனுப்புவதில்லை. கல்யாணம் ஒரு சடங்கு தான் சுமா! நீ உன் பார்வையை மாத்திக்கணும்” என்றாள். எனக்கு பயமாய் இருந்தது. ஜூஸில் வேறு ஏதாவது கலந்திருக்குமோ?

நான் பலமுறை “வேண்டாம்” என்று சொல்லியும், பூஜாவும், சூர்யாவும் ராஜாமணியிடம் ஸ்ரீஅப்பனின் உலகளாவிய கோவில்களை வெப்சைட்டில் காட்டி, இரண்டு ஆன்மிக வகுப்புகளுக்கு பணம் வாங்கிக் கொண்டார்கள் - ஆயிரம் டாலர் அநாவசியச் செலவு:-( அடுத்த இந்திய பயணத்தின் போது அவர்களின் இந்திய மையங்களில் வந்து தங்கிப் போனால் $5,000இல் அமைதி கிட்டும் என்றும் சூர்யா சொன்னார். பின்னர், ராஜாமணி சிரித்தவாறே, “எதுக்கு போன ராமநவமிக்கு ராமர் படத்துக்கு சூடம் காட்டி, பானகம் நீர்மோர் செஞ்சீங்க?” என்றான்.

அதன்பின், வேறொரு நாள் என் சின்ன பிள்ளையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த‌ பூஜா, அங்கு வந்திருந்த‌ எல்லாருக்கும் இந்த ஆன்மிக அனுபவங்களை விற்க முனைந்தாள். “இல்லம்மா, நான் இன்னொரு அநாதை ஆசிரமத்துக்கு மாதந்தோறும் கொடுக்கிறேன்” என்ற வெள்ளைத் தோழியிடம் பூஜா சொன்னது டாப்: “அந்த ஆசிரமத்து நம்பர் கொடுங்க. அவங்க எங்க டிக்கட்டுகளை விற்றால், உங்கள் ஆசிரமத்துக்கு ஒரு கட் கொடுக்கிறேன்”. ஸ்ரீஅப்பனின் 'ஸ்ரீமோட்சா' கூட்டத்தில் இந்த கமிஷன் அவரவர் சீனியாரிட்டி பொறுத்ததாம்.

நாங்க விலை கொடுத்த ஆன்மிகத்தை வாங்கிக் கொள்ள ஸ்ரீஅப்பன் ஆசிரமத்துக்குப் போகவே இல்லை. "ஸ்ரீஅப்பன் அமெரிக்கா வராரு, 6,000 டாலர் கொடுத்தீங்கன்னா, இரண்டு நாள் அவருடன் தங்கலாம், எல்லாருக்கும் சிடி கொடுப்பாரு"ன்னு ஒருமுறை பூஜா ஃபோன் செய்தப்போ, 'இனி என்னைக் கூப்பிடாதே'ன்னு சொல்லிட்டேன்.

'ஆம்வே' சுட்ட ஆம்லெட்டை கொத்து பரோட்டா ஸ்டைல்ல‌ சுடறாங்கப்பா...!

Wednesday, April 01, 2009

ஏப்ரல் 1ம் தேதி கலக்கல்ஸ்! (யூட்யூப் Flip ரகசியமும்:-)

ஷைலஜா, பினாத்தல்ஸ்னு நிறைய பேரு இன்னிக்கு ஏப்ரல் 1ம்தேதிக்காக‌ பதிவு போட்டுருக்காங்க. அவங்களைப் பாராட்டிட்டு, எப்பவும் போல நல்ல நாலு பாட்டு (சாருலதா அம்மிணி) பாக்கலாம்னு யூட்யூப்ல இன்னிக்கு 'Upside Down Show!'.

எல்லாம் தலைகீழ். அவங்க இந்த தலைகீழ் எஃபக்ட் மாத்தறதுக்கு முன்னே ரெண்டே ரெண்டு உங்களுக்காக எடுத்த ஸ்க்ரீன் காப்சர் (ரப்சரு!)


விஜயகாந்து படம் (வாழ்நாள்ல இதுவரை அவர் திரைப்படம் ஒண்ணு முழுக்க முடிய சத்தியமா பாத்ததில்லை) ஏதாச்சும் தலைகீழா பாத்து "ரசிக்கலாம்!"னு உங்களுக்கு தோணிச்சுனா, இத காப்பி/பேஸ்ட் செய்யுங்க‌: http://www.youtube.com/watch?v=9FFDKlHczqM&flip=1

யூட்யூப் விடியோவின் சுட்டி (எந்த சுட்டியானாலும்) அந்த "&flip=1" ஐ (without quotes) கடைசில சேத்தீங்கன்னா, ஐஸ்வர்யா ராய்கூட தலைகீழா ஆடலாம்.


ஜிமெயில் திறந்தா, "என்ன கொடுமை இது ஜிமெயில்?"
ரூம் இல்ல, பங்களாவே போட்டு யோசிச்சிருக்காய்ங்க.



குசும்பன் சாரை நட்சத்திரப் பதிவரா நாள் நட்சத்திரம் பாத்து தான்யா போட்டுருக்காங்க!

Monday, March 23, 2009

போக்குக் காட்டும் பிம்பங்கள்

என் முகமூடியை கவனமாக உடுத்தி,
நடையை கவனமாக
என் தோழரைப் போல்,
என் பேச்சும் சிரிப்பும் கூட
என் தோழர்களைப் போலவே.

"எவ்வளவு முற்போக்குக் கொண்டவர்கள்
என் தோழர்படை என்று
உங்களுக்குத் தெரியுமா?
எங்களைச் சாராததால் நீங்கள்
அனைவரும் பிற்போக்குவாதிகள்.
உங்களை எள்ளி நகையாடுவோம்!
உங்கள் அனைவரையும் வீழ்த்தும்
எங்கள் போராட்டம்.
எங்களைப் போல் உடுத்துங்கள்,
எங்களைப் போல் நடவுங்கள்!
எங்களில் ஒருவருக்கே
உங்களை ஆளும் மகுடம்".

கருத்துகளைப் பேசிப் பழகினேன்
என் வீட்டுக் கண்ணாடியில்.
சொல்லிக் கொண்டேன் என் பிம்பத்திடம்
'நான் எல்லோரையும் முன்னேற்ற வந்திருக்கிறேன்'.

Friday, March 20, 2009

காதல் என்பது...

கல்லூரி விடுதியில், தோழிகள் எல்லாரும் "ஏய், வரியா இல்லியா? லேட் பண்ணாத" என்று மிரட்டிட்டிருந்தாங்க. டேஸ்காலர் ஆக நான் தினம் கல்லூரி போனாலும், அம்மாவிடம் இது ஃபைனல் இயர், நேர்முகத் தேர்வு இருப்பதால் நான் மஹாவுடைய அறையில் ரெண்டு நாள் தங்கப் போகிறேன்னு சொல்லியிருந்தேன். இன்றைக்கு வீட்டுக்கு வருவேன்னும் சொல்லியிருந்தேன். தோழிங்க எல்லாரும் இன்றைக்கு மலைக்கோட்டை போகலாம்னு திடீர் ப்ளான். தஞ்சையில் பொறண்டு வளர்ந்தவள், எனக்குத் தெரியாத மலைக்கோட்டையா? ஆனால், இந்த பொண்ணுங்க(& பசங்க)ளோட கொஞ்ச நாள் தானே, கடைசி வருடம், எல்லாரும் ஆளுக்கு ஒரு மூலைக்குப் போகப் போகிறோம்!

உஷாராணி, "ட்ரஸ் இல்லியேன்னு கவலைப்படாதே! உனக்குப் பிடிச்ச என்னோட ஸ்கர்ட் தரேன், போட்டுக்கோ! மஹாவோட ஷர்ட் டாப் மாட்ச் ஆகும்... வாடியம்மா!" இது எல்லாரும் சென்னைப் பெண்கள். இப்போதைக்கு மலைக்கோட்டைக்கு இவர்கள் எல்லாரும் திரும்பி வரப் போவதில்லை என்று அறிந்து அங்கே "தேவ" தரிசனம் பார்க்க வரும் பசங்களை ஒரு வழியாக்கிவிட்டுத் திரும்புவார்கள் - பாவம், அந்தப் பையன்கள் இரண்டு வாரத்துக்கு சாப்பிட, தூங்க‌ப் போவதில்லை. ஒருமுறை பிரஹதீஸ்வரர் கோவிலில் அப்படித்தான் இவர்கள் அடித்த கூத்து... நான் அதுக்கப்புறம் ஒரு வருஷம் அந்தப் பக்கமே போகவில்லை.

மஹா, "ஹே ட்ரீமர்! இது ஃபைனல் பார்ட்டி! வி ஆர் செலிப்ரேடிங் அவர் ஜாப்ஸ் டூ! கௌதமும் வரான். தெரியும்ல?" என்றாள். கௌதம் என் மனதுக்கினியவன். என்றாவது ஒரு நாள் என் கண்களால் என் கனவுகளை அவனிடம் சொல்லிவிட வேண்டும்.. எண்ணங்களை நானே கலைத்து, "நாந்தான் வரேன்னு சொல்றேனில்ல, எங்கம்மாவுக்கு ஃபோன் சொல்லிட்டு வரேன்" என்றேன். மஹா, "சொன்னேன்ல, அவ வருவான்னு. தம் தம் த தம் த கௌதம்!" என்று பாடினாள். கனவுகளும் வெட்கமுமாய் அங்கிருந்து கலைந்து போனேன்.

அம்மா தம்புமாமா வீட்டில் சமையல் செய்பவர்; தம்புமாமாக்கு ஃபோன் செய்து அம்மாவைக் கூப்பிடச் சொன்னால், மாமா ஆயிரம் சாக்கு சொல்வார்; "படிப்பு எல்லாம் ஒம் பொண்ணு தானே பாத்துக்கறது, புருஷனையும் தேடிடுவாள், பாரு" அதில் தேடிடுவாள் சப்தம் வேறு மாதிரி சொல்வார். அம்மாவிடம் சொன்னால், "ஏண்டி, உன்னையும் ராஜுவையும் படிக்க வச்சதே இந்த சம்பளம் தானே! நீயும் ராஜுவும் வேலைக்குப் போக ஆரமிச்சா, நான் வேலைய விட்டு நின்னுக்கறேன்" என்று விடுவாள். அப்பா வைதிகம் செய்தவர், நான் பிறந்த இரு வருடங்களில் போய் விட்டார். அவர் ஃபோட்டோ தவிர வேறு நினைவுகள் இல்லை.

தம்பு மாமா வீட்டுக்கு ஃபோன் செய்தேன். முக்கியமாய் அம்மாவிடம் சொல்ல வேண்டியது - எனக்கு டிசிஎஸ்ல வேலை கிடைத்து விட்டது என்பது. ஃபோன் செய்தால், தம்புமாமா நான் யாரோடாவது ஊர் சுற்றுகிறேனா, வேலை தேடுகிறேனா, எனக்கு வேலை கிடைத்தால் அம்மா சமையல் வேலைவிட்டு நின்று விடுவாளா என்றெல்லாம் கேட்டு விட்டு, "உங்கண்ணா ராஜு பாங்க் பரிட்சை எழுதினானாமே, அதுல வேலை கிடைச்சுடுத்து, அதான் கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு போனா.. நீ ஃபோன் பண்ணினா சொல்லச் சொன்னா". மாமாவிடம் எனக்கும் வேலை கிடைத்து விட்டது என்று சொல்லி அவர் நெஞ்செரிச்சலைக் கிளப்ப‌ வேண்டாமேன்னு (அப்புறம் அம்மா தானே பத்தியச் சமையல் வேறு செய்யணும்) சொல்லவில்லை. "சரி மாமா, நானும் கோயிலுக்குத் தான் கிளம்பிட்டிருக்கேன். அங்க பாத்துக்கறேன்" என்று எதையோ சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்.

வல்லத்திலிருந்து திருச்சி பஸ்ஸை கண்டக்டர் (எல்லா டிரைவர், கண்டக்டர் பேரும் எங்களுக்குத் தான் தெரியுமே!) பேரைச் சொல்லி நிறுத்தி ஏறிக் கொண்டோம். என்னிடமிருந்து ஓரடி தள்ளி என்னப் பார்த்தவாறே கௌதம். கௌதம் ரகசியமாக "யூ லுக் க்யூட்" என்றான். நான் சங்கடமாக மஹாவை நோட்டமிட்டேன். அவள் மெட்ராஸ் பெண்ணாய் லாகவமாய் ஒரு கண்ணடித்துத் திரும்பிக் கொண்டாள். "மஹா சொன்னாள்" என்று சொன்னான். ஐயோ, இந்த ஓட்டை பஸ்ஸில் தானா இந்த காதல் காவியம் தொடங்க வேண்டும்!! பஸ் லைசன்ஸ் ப்ளேட் நோட் கூடச் செய்யவில்லியேன்னு (கெக்கே பிக்கேவாகத்) தோன்றியது. கௌதம் சிற்சில தமிழ்ப்பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியிருந்தான். ஒரு கவிதைப் போட்டியில் அவன் மூன்றாம் பரிசும், நான் முதல் பரிசும் வாங்க என் ஒருதலைக் காதல் தொடங்கியது (மூணாவது பரிசு வாங்கறவங்களை யாராவது காதலிச்சுத் தானே ஆகணும்? அதே மாதிரி, முதல் பரிசு வாங்கற பொண்ணுக்குக் காதல் தப்பா?). கௌதம் மத்தியதரக் குடும்பம், அவன் அப்பா அரசாங்க குமாஸ்தா என்று மஹா துப்பறிந்து வந்து சொல்லியிருந்தாள்.

"பிள்ளையாரே, நான் சமத்துப் பொண்ணு. இந்த பசங்க தான் கலாட்டா பண்ண வராங்க. அவங்களைக் கண்டுக்காம, என் காதலை நிறைவேத்திடு. அட்வான்ஸா மலைக்கோட்டை ஏறிடுறேன்" என்று மனமார பஸ்ஸில் தொங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவரை பிள்ளையாராக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டேன். "நீ திருக்குறள்லாம் படிப்பியாமே" என்று எங்கள் கடலை அஃபிஷியலாகத் தொடங்கியது. எப்போதுமில்லாமல் திருச்சி மிக விரைவில் வந்தாற்போலிருந்தது. மெயின்கார்டில் இறங்கி, நண்பர்கள் ஆளாளுக்கு "ஐஸ்க்ரீம்", "இல்ல, கோயில் போயிட்டு அப்புறம்", "நான் இன்னிக்குக் கோயில் வரமுடியாது", "ஏண்டி அப்பவே சொல்லலை?" எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது.... ரோட்டுக்கு அந்தப் பக்கம் விந்தி விந்தி ராஜுவும், கூடவே அம்மாவும்.

அம்மா பெரியதாய் விபூதி இட்டிருந்தாள். நான் கௌதம் பக்கத்திலிருந்து மெதுவாகக் கழண்டு, ரோட்டில் ஓடி "ராஜு கங்க்ராசுலேஷன்ஸ்டா" என்று கத்திவிட்டேன். படிப்பு, போட்டி, பரிசுன்னு எல்லாத்திலியும் நான் பேர் வாங்க, ராஜு எதிலும் சோபிக்காமல் இருந்தான்; பி.காம் மாலை நேரக் கல்லூரியில் படித்தான். அதைத் தவிர தையல் கடை, கோவில் என்று பகுதிநேர ஊழியமும். ராஜுவுக்குச் சிறுவயதில் போலியோவால் ஒரு கால் சூம்பியிருந்தது வேறு. இந்த வேலை கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி தானே. அம்மா, விபூதித் தீற்றலைவிடப் பெரியதாய்ச் சிரித்து, என்னிடம் "பாத்துடி" என்றாள்.

தம்புமாமாவோடு ஃபோனில் பேசியதையும், பேசாததையும் என்று ராஜுவின் வேலை, என் வேலை பற்றி நான் சொல்லச் சொல்ல அம்மாவுக்கு சிரிப்பு கொள்ளவில்லை - "நாங்க மலைக்கோட்டை அடிப்பிள்ளையாரைப் பாத்துட்டு, லட்சுமி சித்தியையும் பாக்கப் போறோம்னு தானேடி சொல்லிட்டு வந்தேன், ஆனாலும் தம்புமாமாவுக்குக் குசும்பு" - என்றாள். அம்மா ஒரு நிமிடம் மலைக்கோட்டையை விட நிமிர்ந்தாற் போலிருந்தது. திரும்பி ராஜுவின் முகத்தைப் பார்த்ததும், "என்னை தலையெடுக்க வச்சுட்டான்டி எம்பிள்ளை. நாளைக்கு நீயாவது யாரயாணும் கல்யாணம் பண்ணிட்டு எங்களை விட்டுப் போயிடுவே" என்று சிரித்தாள். நானும் "இன்னிக்கு ரொம்ப நல்ல நாள்மா", என்றேன். அதற்குள் கௌதம் ரோடை க்ராஸ் செய்து வந்தான். "நமஸ்காரம் மாமி" என்று அம்மாவிடமும், ராஜுவிடம் "ஹலோ" என்று பேசினான்.

மற்ற தோழிகளும் தோழர்களும் அங்கிருந்து கையாட்ட, அம்மாவும் இங்கிருந்தே கையாட்டினாள். இதுவரை நான் ஆண் தோழர்களை வீட்டுக்கு அழைத்து வந்ததில்லை, 10அடிக்கு 10அடி குடிலில் எப்படி அழைத்து வருவது? கௌதமிடம் அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி, "நீங்கள்லாம் கோயில் போயிட்டு வாங்கோ, நாங்க கிளம்பறோம்" என்று ஊருக்குக் கிளம்பினாள். மலைக்கோட்டைக் கோயில் போகும் நண்பர்கள் முன்னே நடக்க, நானும் கௌதமும் நண்பர்களின் பின்னால். கௌதம் என்னிடம் "உங்க அம்மா ரொம்ப சிம்பிள்" என்றான். ஓரம் நைந்த புடைவை சிம்பிள் அல்ல, இருப்பது அவ்வளவே. ராஜுவின் ஷர்ட், பான்ட் தம்பு மாமாவுடையது. நான் நிதானித்து, என் குடும்பக் கதையைச் சொன்னேன். "கஷ்டம் தான்" என்ற கௌதம் மற்ற நண்பர்களோடு சேர்ந்து கொண்டான். மலைக்கோட்டை அடி வரை கூட எங்கள் காதல் பயணிக்கவில்லை.

பி.கு.: பின்னொரு நாள் "வானில் பயணிக்க நினைத்தாலும் என் பாதங்கள் மண்ணில்"னு என்னோட ஆட்டோகிராஃப் நோட்டில் கௌதம் எழுதினான்:-) கௌதமை விட உத்தமனாய், ஒரு ராஜாமணி எனக்குக் கிடைக்க வைச்ச மலைக்கோட்டை பிள்ளையாருக்கு நன்றி:‍-)

சங்கமம் கல்லூரி போட்டியில் இதுவும் சங்கமம்.

Saturday, March 14, 2009

புத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மேற்கும்)


உண்மையில, நான் பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்). பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல!) போன்ற புதிய சமுதாயங்களின் கேள்விகளுக்கான விடைகளை புனிதக் குரான், ஹதீத் சொற்றொடர்களிலிருந்து புரிதல்களுடன் ஆரம்பிக்கிறது. மேற்படி சொற்றொடர்களை வேறு விதங்களில் புரிதல் இஸ்லாமிய வழக்கத்துக்கு எதிரானதா இல்லியா என்பது அவரவர் சொந்த விஷயம் என்று அதை டீல்ல விட்டுடறேன் (இந்த எண்ணம் தோணும் வரை என்னால் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க முடியவில்லை). புட்டோ இறப்பதற்கு முன் எழுதி, இறந்த பின் வெளிவந்த புத்தகம் என்பதையும் கவனிக்க.

புட்டோவின் அரசியல் பின்புலம், எழுத்துத் திறமை எல்லாம் தெரிந்த விஷயம். இந்த புத்தகத்தின் ஆடியன்ஸ் (எழுதினவர் பார்வையில்) மேலை நாடுகள் தாம்; எடுத்துக்காட்டாக, "மற்ற பெரும் மதங்கள் மாற்று-மதத்தினரை நடத்துவதற்கு நேர்மாறாக, முஸ்லிம்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் ‘வேத மறையினர்’ என்றே கருதுகின்றனர். எனவே ஓஸாமா பின் லாடென் உள்ளிட்ட உலகளாவிய முஸ்லிம் தீவிரவாதிகள் இஸ்லாத்தைப் பற்றிய தம் முழு அறியாமையையே காட்டுகின்றனர்” என்று கூறுகிறார்;-) [பக். 37] இன்னும் சொல்கிறார்: “இஸ்லாத்தைப் பொறுத்த வரை, ஒரே-இறைத் தத்துவம் கொண்ட மதங்கள் எல்லாமே மோட்சத்தை நோக்கியே செல்கின்றன. இஸ்லாத்தில், முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஒரே-இறைத் தத்துவத்தை நம்புவோர் அனைவருமே அவரவர் பூவுலகில் கொண்ட நடத்தை கொண்டே கடவுளால் கணிக்கப்படுவர், அம்மனிதர்களின் மதங்களால் அல்ல”. (கொலம்பஸ், கொலம்பஸ், எனக்கும் - இன்னும் கோடானு கோடியினருக்கும் - விட்டாச்சு லீவு!)

அவங்க புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடந்த புரட்சி/மக்களாட்சி/மறுமலர்ச்சி பற்றி உலக வரலாற்றுப் பாடங்கள் படிக்கிறாங்க. அவங்க [பக். 84/85] இரண்டு பக்கங்களில் எழுதியதை புள்ளிகளில் குறுக்கிச் சொல்கிறேன்: "இஸ்லாமிய உலகில், பலகாலங்களாய் வாழும் மக்களாட்சிகள் உண்டு. இதற்கு புனிதக் குரானின் சொற்கள் பொறுப்பல்ல! ... இதற்கு இரண்டு காரணங்கள்: இஸ்லாத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குள் மறைஞானத்தை ஒட்டி நிகழும் யுத்தம்; மேலை நாடுகளின் காலனீய ஆதிக்கம் - இவையே! ... முஸ்லிம் மன்னராட்சி என்பது நியாயமான மதச்சார்பற்ற அரசின் வழிகளை மக்களுடன் கலந்தாலோசனை செய்யும் அல்-குரானின் வழிகளோடு இணைக்கிறது...இஸ்லாமிய நாடுகளில் மக்களின் சுதந்திரத்தைக் குறித்து அமெரிக்கா செய்திருக்கும் ஆராய்ச்சி முஸ்லிம் வழக்கங்களை அறியாமல் செய்யப்பட்ட ஆராய்ச்சியாகும் - எனவே முஸ்லிம் நாடுகளில் சுதந்திரம் இல்லை என்பது பிழை! ” எனவே சரியான அரசியல் ஒப்புநோக்கு செய்யிறேன்னுட்டு, இஸ்லாமிய நாடுகள் பற்றின வரலாற்றுப் பாடங்கள் (அமெரிக்க இடதுசாரி ஒப்புக் கொள்ளும் வகையில்!) படிக்கிறாங்க! பல எடுத்துக்காட்டுக்களும் அமெரிக்க நாட்டினருக்குப் புரியும் வகையில் இருக்கு: “சுதந்திரம் என்பது இந்தோனேஷியாவில் இருப்பவருக்கும் லூயிசியானாவில் இருப்பவருக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும்”. இந்தோனேஷியா மக்கள் தொகையில் உலகளவில் நான்காவது பெரிய நாடு - 230மிலியன்; லூயிசியானா, அமெரிக்க தென் மாநிலம், 5மிலியன் மக்கள் தொகை!

இந்த புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடக்கிற / நடந்த அரசாட்சி முறைகள், புரட்சி எல்லாவற்றுக்கும் ஒரு (மேலை நாட்டு) அரசியல் சார்ந்த மழுப்பல் இருக்கு. பின் அட்டை முழுக்க, புத்தகத்தைப் பாராட்டி அமெரிக்க (ஜனநாயகக் கட்சி) அரசியல் பிரபலங்கள் எழுதியிருக்காங்க. இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ள குறிப்பிடப்படும் நாடுகள் தயாரில்லை என்பது ஊறுகாய்க் காரம் மாதிரி (தெரிஞ்ச விஷயம்). பெநசிர் புட்டோ இறக்குமுன் எழுதிமுடித்த, மேலை ஆதரவோடு அரசியலில் மீண்டு வர முயற்சி செய்யும் போது எழுதியது என்பது தான் இந்த புத்தகத்தின் வரலாற்றுப் பின்னணி, வேறு விஷயம் ஏதுமில்லை - எ.தா.க! இந்த புத்தகத்தைப் படித்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம்னு நேரங்கடந்து அறிந்து கொண்டேன்.

மொத்தத்தில், பெர்ஸிபோலிஸ்/சமரசம் - இரண்டு புத்தகங்களுமே இஸ்லாமியப் புரட்சிக்குடும்பங்களில் பிறந்த, அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்த, இரண்டு வித்தியாசமான பெண்கள் எழுதினது. 1969இல் பிறந்த அரசியல்/கட்சி எதிர்காலம் கருதாத, மனம்போன போக்கில் வாழும் மர்ஃஜானே சாட்ராபி பர்தாவின் மேலான வெறுப்பை வெளிப்படையாகவே சொன்னார்; 1953இல் பிறந்து அரசியல்/கட்சி எதிர்காலத்தையே கருத்தில் கொண்ட பெநசிர் புட்டோவின் கைகள் எப்பவுமே புகைப்படம் எடுக்குமுன் ஹிஜாப்பை சரி செய்யும். புத்தகங்கள் அவரவர் வாழ்வியல் நேர்மையைக் காட்டுகின்றன.

புத்தக அட்டைப்படம், விமர்சனம் இன்னும் இணையத்தில்.

Thursday, March 05, 2009

விட்டு விடுதலையாகாமல்...நாங்கள்!

எப்போது பார்த்தாலும்
கூடத்தின் 12 அடி உயரக் கண்ணாடியை
வெளியிருந்து
கொத்திக் கொண்டே இருந்தது
அந்த சிட்டுக்குருவி.

அதை விரட்டுவதற்கென்றே,
உள்ளிருந்து துரத்த
தலையணைகளும் மென்பந்துகளும்.
எத்தனை முறை விரட்டினாலும்
அம்பெனக் கிளம்பி
திரும்பவும் கண்ணாடிக்கே வந்தது.

10 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட
எங்கள் கூடத்துக்குள் சிறைபட்ட
தன் குடும்ப நினைவுகளை
விடுதலை செய்யப் போராடியதோ?
இல்லை, இரு மாதங்களுக்கு முன்
செத்துக் கிடந்த மற்றொரு குருவியின்
சொந்தமோ?

இந்த முட்டாள் குருவி
செத்துத் தொலையாமல் இருக்க
கடவுளை வேண்டினேன்.

இப்போது எல்லாம் கண்ணாடி ஜன்னலில்
வான்முகம் தெரிவதில்லை.
இன்றோ,
குருவிக்கு ஒரு குட்டிக் குருவியும் துணை.
என் கருவிருந்த குட்டிக்குருவிகளோ
வெளியிலிருக்கும் குருவிகளின் கட்சியே -
எங்கள் கூடு அக்குருவிகளுக்குச் சொந்தமென.

எழுத்தாளர் மாதவராஜ் அவர்களின் படைப்பிலிருந்து (விட்டு விடுதலையாகாமல்...) என் “மட்டமான காப்பி”, மற்றும் என் வீட்டு நிசத்தின் பாதிப்பு.

Monday, March 02, 2009

புத்தக விமர்சனம் - சாட்ராபி: பெர்ஸிபோலிஸ்-2.

பெண்களுக்கு பதின்ம வயதில் ஆண்களை எதிர் கொள்ளுவது மிகச் சிக்கலானது! நம்மூர்ல சான்ஸே இல்லை; அதுவும் வயசு வித்தியாசம் பார்க்காம பெண்களைக் கிண்டல் செய்வாங்க. பொண்ணுங்க என்ன செய்வோம்? தெரிஞ்ச பசங்க என்றால், பேரைச் சொல்லிக் கூப்பிட்டு “ஏன்டா அப்பிடி கிண்டல் பேசறே” என்று கேட்டால் அழுதுடுங்க;-) ஏதாவது தெரியாத பசங்க கிண்டல் அடிச்சா, அதுவும் ஜோக்கா நல்லா இருந்தா, சிரிக்கவே முடியாது, சிக்னல் ப்ராப்ளம் வந்துடும்! யாராவது நல்லா இருக்கானேன்னு திரும்பிப் பாத்தா நம்மூர்ல வாழ்நாள் சிறை:-) ஜோக்கடிச்சாலும்..., உண்மையில் கட்டுப்பாடுகள் நிறைந்தவை பெண்களின் வாழ்க்கை - எல்லா நாடுகளிலுமே.

இரானிலும் கூட. பர்தா, முக அலங்காரம் கூடாது, பின்பாகம்(!) தெரியாத உடை / நடை கட்டுப்பாடுகள்.... இதையெல்லாம் மீறி பெண்களின் வாழ்க்கையை - பெர்ஸிபோலிஸ் இரண்டாம் பாகத்தில், பதின்ம வயது முதல் மர்ஃஜானேவின் 24 வயது வரை - இரான், ஆஸ்ட்ரியா, திரும்பி இரான், ஃப்ரான்ஸ்னு நீளும் தன் வாழ்க்கையை நேர்மையா (மொழிப் பிரசினை தொடங்கி, உடல் மாற்றங்கள், போதைப் பழக்கம்னு எல்லா பிரசினைகளையும்) சித்திரங்களில் எழுதியிருக்கிறார் மர்ஃஜானே சாட்ராபி. மர்ஃஜானே சாட்ராபியின் பெர்ஸிபோலிஸ் பத்தி பிரபலப் பதிவர்கள் எழுதியிருக்காங்க. நான் பிரபலம் இல்லை; சாதாரணப் பதிவர். அதுனால, பெர்ஸிபோலிஸ்-2 (2ம் பாகம்) பத்தி எழுதறேன்.

பெர்ஸிபோலிஸ் என்பது பெர்சியாவின் தலைநகரத்தின் பழைய பெயர். உயர்நடுத்தரக் குடும்பத்தில பிறந்த மர்ஃஜானே சாட்ராபி, பக்கத்தில் உங்களைப் பாத்து சிரிக்கறது அவங்க தான். (உச்சரிப்பு இங்கே), அவங்க பேட்டி இங்கே... (ஷாவின் பல மனைவிகளில் ஒருவரோட எள்ளுப் பேத்தின்னு சொல்லிக்கிறாங்க தன்னை! இல்லைன்னு சொல்றவங்களும் இருக்காங்க) நிறையவே துடுக்கு! சிறுவயதிலேயே அவங்க துடுக்குத் தனத்தால, ஈரானில் நிகழ்ந்த புரட்சியின் போது வம்புல மாட்டிக்கப் போறாங்கன்னு சொல்லி இடதுசாரி எண்ணங்களுடைய (இன்ஜினியர்) அப்பா, (ஆடை டிஸைனர்) அம்மா, போராளிப் பாட்டி எல்லாரும் சிறு வயதிலேயே ஆஸ்ட்ரியாவுக்கு படிக்க அனுப்பிடறாங்க. அவங்க படிக்காமல், உள்ளூர் பெண்களைப் போல இருக்க ஆசைப்பட்டு (அந்த வயசிலே வேறு என்ன செய்வாங்க?) எதுவும் ஒத்துவராமல் 4 வருடங்களில் திரும்ப ஊருக்கு வந்துடறாங்க. ஊர்லயும் தனக்குக் காதல் என்று தோன்றிய ஒருவரை மணம் செய்து கொண்டு விரைவிலேயே விவாகரத்தும். அப்புறம் ஃப்ரான்ஸுக்கு திரும்பிப் போய் சித்திரம் வரைவதில் படிப்பும் தொழிலும். Maus புத்தகத்தைப் பார்த்த தாக்கத்தில், அதே போல் தன்கதையை எல்லாமே நகைச்சித்திரங்களாக எழுதியிருக்காங்க.

எந்த போராளியின் சின்ன வயசு கதையிலும் ஒரு உத்வேகம் இருக்கும் - அது கட்டாயம் இதுல மிஸ்ஸிங். இந்த அளவு எண்ணம், பணம் ரெண்டுத்திலியுமே சுதந்திரம் கொடுக்கும் அப்பா, அம்மா, பாட்டி இருந்தாலும், தன்னோட சந்தோஷங்கள் தான் எதையும் விட முக்கியம் என்னும் ஒரு மேட்டிமைத்தனம் (மொள்ளமாரித்தனம்?) கதை முழுக்க தெரியுது... பிரச்னைகளை உருவாக்கி அதிலிருந்து வெளியேறும் உதவியையும் பெறுகிறார்:-( (”பரிட்சைக்கு பயமா இருக்கு அம்மா, சாமி கிட்ட வேண்டிக்கோ”, “இந்தத் திருமணத்தை முறிச்சுக்கிறேன், என்னை வெளிநாட்டுக்கு அனுப்புங்க அப்பா”). ஆனால், மிகுந்த அரவணைப்போடு இரானில் வளர்ந்தவர், பதின்ம வயதில் தனியாய் ஆஸ்ட்ரியாவுக்குப் போய் அங்கே தங்க சரியாய் இடம் இல்லாமல் இடம் மாறி, இடம் மாறி வாழுவதை விவரிக்கும் போது பாவமாத் தான் இருக்கு.

சரி, இந்த புத்தகத்தின் சிறப்பு தான் என்ன? எழுத்தாளரின் எண்ண நேர்மை. இரான் திரும்பியதும், பல்கலைக்கு நேர்முகத்தேர்வுல முல்லா கிட்ட ”ஆஸ்ட்ரியாவில பர்தா அணியவில்லை; எனக்கு அரபி தெரியாது”ன்னு கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மை. போதைப் பழக்கத்தையோ, அல்லது ஆஸ்ட்ரியாவில் சந்திக்கிற மாணவர்களின் வாழ்க்கையை (ஒருமாதிரி க்யூட்! ரசிச்சேன்!) நேர்மையா சொல்லுகிறார். அவருடைய சுய எள்ளல் நல்லாவே இருக்கு - தன்னைப் பற்றி வரைகிற படங்களும் சரி, சொற்களும் சரி, சூப்பரா விழுது!

நம்மூர் போலவே (முதல் பத்திக்கு வந்துட்டோமே!) ஆண்களின் உலகத்தில் வளர்ந்து போராளியாக, நேர்மையான உணர்வுகளோடு இருப்பது கஷ்டம் தான்! இரானிலோ, ஓவியப் பாட வகுப்பில் கூட, மாடல் பெண் முழுக்க பர்தா அணிந்து அமர்கிறார். இரானில் புதிய ஆட்சியின் கீழ், ஆண்களின் பார்வைக் கோணலைச் சரி செய்ய, பெண்களின் நடைக்கும் உடைக்கும் ஏற்படுத்தப்படுகிற கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றன. மேல்குடி இரானியப் பெண்கள் அந்த கெடுபிடியிலும் ரகசிய பார்ட்டி, காதல்னு இருக்காங்க. புத்தகத்தைப் படிக்கும் போது, பர்தாவைத் தவிர்த்துப் பார்த்தா, நம்மூர் நினைவு தான் எனக்கு முழுக்க! (நம்மூர் ஆண்களின் உலகம் இல்லைன்னு சொல்பவர்கள் எல்லாரும் பெண்ணுடை தரித்து கூட்டம் நிறைந்த நேரத்தில் சென்னை மாநகர பஸ்ஸில் ஏறி வர பிடி-சாபம்! இதுல மங்களூரு ஸ்ரீராம் சேனே வேற நினைவுக்கு வந்து தொலைக்குது!!!)

இரண்டே மணிநேரத்தில் முடிக்கக் கூடிய சித்திரப் புத்தகம். முடிந்தால், பெர்ஸிபோலிஸ் முதல் பாகம் முடித்து விட்டுப் படிக்கவும்.

Wednesday, February 25, 2009

பதிவுக்கு பின்னூட்டம் வரலைன்னா என் நிலை இது தான்! (பீடில்ஸ்)

பீடில்ஸ் பாடல் காணொலி:


தமிழாக்கம்:

நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.
நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.

எலினார் ரிக்பி
அவள் திருமணம் (என்றோ) நடந்த தேவாலயத்தில்
விழுந்து கிடக்கும் அரிசியைப் பொறுக்குகிறாள்...
ஏதோ ஒரு கனவில் அவள் வாழ்கிறாள்,
சன்னலோரம் காத்துக்கொண்டு!
கதவருகில் ஒரு குப்பியில் கிடக்கும் முகத்தை அவள் அணிவது வழக்கம்....
யாருக்காக?


இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?
இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?

நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.
நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.

மறைத்தந்தை மக்கென்ஸி
தம் அருளுரையின் வார்த்தைகளைக் கோர்க்கிறார்;
யாருமே கேட்கப் போவதில்லை...
யாரும் அருகிலும் வருவதில்லை!
அவர் பணிபுரிவதைப் பாருங்கள்:
யாரும் இல்லாத இரவில் அவர் காலுறைகளிடம் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்?
அவருக்கு என்ன போச்சு?


இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?
இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?

எலினார் ரிக்பி
தேவாலயத்திலேயே மரித்தாள்,
தனியளாய் அவள் பெயருடன் மட்டும் புதைக்கப்பட்டாள்.
யாருமே வரவில்லை.
மறைத்தந்தை மக்கென்ஸி
தம் கைகளில் இருந்த மண்ணைத் துடைத்தவாறே அவளுடைய கல்லறையிலிருந்து நடக்கிறார்...
யாருமே காப்பாற்றப்படவில்லை!


இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?
இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?

கெ.பி.யின் பின்னூசி குறிப்பு: கவுஜ போட்டா மக்கள் காணாம போயிடறாங்களே, என்ன ஆவுதுன்னு பாக்கலாம்னு தான். மக்கென்ஸியாகவும், எலினார் ரிக்பியாகவும் நானேதான்! Scheduled post.

Sunday, February 22, 2009

புரியாத பெண்கள் - 2

முன் குறிப்பு: இதே பெயர்/ஊர்/தொழில் விவரங்களோடு யாரேனும் அமைந்திருந்தால் அது கட்டாயம் தற்செயலே. தெரியப்படுத்தினால் விவரங்களைக் கட்டாயம் மாற்றி விடுகிறேன். யாரையும் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல. ஆனாலும் என் கேள்வி இது தான்: போராளி குணங்கள் எங்கே போயின இந்த பெண்களுக்கு? உயர் கல்வியோ இந்தியச் சமூக வாழ்வியலோ இந்த பெண்களுக்குச் சொல்லித் தந்ததும் சொல்லித் தராததும் என்ன?
[முந்தைய பதிவு: புரியாத பெண்கள் - 1]

ஹைமாவை எனக்கு ஓரிரண்டு மாதங்களாகத் தெரியும். அமைதியான, அன்பான மருத்துவர் என்று அவருக்கு நல்ல பெயர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கான்சஸின் ஒரு மூலையில் நாங்கள் விரும்பிச் செல்லும் கோயிலுக்கு அவரும் வருவார். அமைதியாய் வேண்டிச் செல்வார். அவருக்கு ஒரே பெண். என் குழந்தைக்கும் அவர் பெண்ணுக்கும் ஒரே வயது. நாங்கள் கோயிலுக்குள் வேண்டும் போது குழந்தைகள் வாயிற்பக்கம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஓரிரு முறை வெளியே விளையாடப் போன குழந்தைகளைப் பிடிக்கப் போன போது எனக்கு ஹைமா பழக்கமானார். ஹைமா தமிழ்ப் பெண்; ஒரிஸ்ஸாவிலேயே வளர்ந்தாலும், நன்றாகத் தமிழ் பேசுவார்.

இரண்டு முறை என்னையும் ராஜாமணியையும் அவர் வீட்டிற்கு அழைத்து உணவருந்தச் சொல்லியிருக்கிறார். முதல் முறை சென்ற போது அவருடன் கட்டாக்கில் கூடப் படித்த இருவர், இருவரும் அவர்தம் கணவர்களுடன் (கணவர்களும் மருத்துவர்கள்) வந்திருந்தனர் - அவர்கள் பேச்சிலிருந்து ஹைமா திருமணமாகி இது தான் முதல் முறை அவர்களை வீட்டுக்கு அழைத்திருக்கிறார் என்று தெரிந்தது. (ஹைமாவின் குழந்தைக்கு ஐந்து வயதாகியிருந்தது...!?) வந்தவர்களில் ஒரு தம்பதி செயிண்ட் லூயிஸிலிருந்தும் மற்ற தம்பதி அயோவாவிலிருந்தும் வண்டி ஓட்டி வந்திருந்தார்கள். மருத்துவம் பற்றி ஒன்றும் தெரியாத எனக்கும் ராஜாமணிக்கும் கூட கம்பெனி கொடுத்தது ஹைமாவின் கணவர் பாலா. பாலாவின் அளப்பறைகளிலிருந்து அவர் பல உள்ளூர் கம்பெனிகளில் பல வருடங்களாக ’பிரமாதமான சேல்ஸ் வேலை’ செய்பவர், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், அவர் ஈட்டிய பெரும் செல்வத்திலிருந்து(!) இந்த 4லட்ச டாலர் மதிப்புள்ள வீட்டை வாங்கியிருக்கிறார் என்பதெல்லாம் தெரிய வந்தது. ஹைமாவின் தீர்க்கம் பாலாவிடம் மிஸ்ஸிங்.

பேச்சு சுவாரஸ்யத்தில், மற்ற மருத்துவர்களெல்லாம் தீவிரமாக, கல்லூரி, வேலை பற்றி பேசத் தொடங்கிவிட்டதை கவனித்தேன். பாலா, ‘ஒரு நிமிஷம் இருங்க, இதோ வரேன்’ என்றார். சுற்றிக் கொண்டு கொல்லைப் பக்கம் பின்னால் சென்று மஞ்சள் இலை வார்த்த காட்டன்வுட் மரங்களுக்குப் பின்னால் மறைந்தார். நான் கையில் இருந்த கப்பிலிருந்து ஜூஸை குடிப்பது போல் அவர் என்ன செய்கிறார் என்று கவனித்தேன். மரங்கள் ஓரிரண்டின் பின்னால் நின்று கவனித்தவர், எங்கள் பக்கம் திரும்பினார். (வம்பு என் ரத்தத்தில் ஊறியதாக்கும்!) யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்தவர், குனிந்து ஒரு மது பாட்டிலை எடுத்து ரசித்துக் குடித்தார்.

நான் அவர் முழு பாட்டிலையும் குடித்து முடிக்கிறார் என்று கவனித்து, அதிர்ந்து, ராஜாமணிக்குக் கண்ணைக் காட்டினேன் (எங்கே அதெல்லாம் புரியப் போகிறது, வீட்டுக்கு வந்து ‘நான் கண்ணை கண்ணைக் காட்டினேன், நீ என்ன பண்ணிட்டு இருந்தே’, ‘தூக்கமா வந்தது, உனக்கும் தூக்கம்னு நினைச்சேன்’ எல்லாம் ஆச்சு!). இந்த ஊர் பார்ட்டிகளில் பாட்டில் இருப்பது ஒன்றும் தீங்கு இல்லை. ஆனால், ஏன் மறைத்துக் குடிக்க வேண்டும்? (வந்திருப்பவர்கள் பங்கு கேட்கப் போகிறார்கள் என்றா:-) திரும்பி வந்த பாலா அதி வேகமாகப் பேசவும் உளறவும் தொடங்கினார். பார்ட்டி வெகு விரைவில் முடிந்தது.

பார்ட்டி முடிந்து, ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் கோவிலில் சந்திப்பு. இந்த முறை என் தோழி மீராவுடன் ஹைமா பேசிக் கொண்டிருந்தார். இரண்டு பேருமே டாக்டர்கள் என்பதால், அவர்களிருவரும் தோழிகளும் கூடவாம்! மீராவின் கணவரும் என் கணவரும் ஒரே அலுவலகம் என்றதும் ஹைமா ‘ஹேய், எல்லாம் நெருங்கிட்டோம்ல!’ என்று உண்மையான மகிழ்ச்சியோடேயே கேட்டார். மீராவோடு அன்று மாலையே தொலைபேசினேன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து படித்து அமெரிக்கா வந்த பாலாவுக்கு இது மூன்றாவது திருமணம்; முதல் இருவரும் வெள்ளைக்காரப் பெண்கள், இருவருமே பாலாவின் குடிப் பழக்கத்தைக் காரணம் காட்டி விவாகரத்துப் பெற்றார்கள்; ஹைமாவின் தந்தை இளைய வயதில் அவர்கள் குடும்பத்தை விட்டுப் போய் வேறு குடும்பம் அமைத்துக் கொண்டார்; அரசாங்க / தாய்மாமாவின் உதவிப் பணத்தில் மருத்துவம் படித்த ஹைமாவுக்கு இந்த வரன் கல்யாணத் தரகர் மூலம் வந்தது - ஹைமா ஒப்புக் கொண்டதற்கு முக்கியக் காரணம் பாலா குடும்பத்தினர் சொன்ன அமெரிக்கக் குடியுரிமை.

என் தோழி மீராவுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். ‘சுமா, தப்பா நினைக்காதே. ஹைமா எதுக்குக் கோயில் வந்தான்னு தெரியுமா?’

நான் - ‘அவ மாமியார் ஊர்ல இருந்து வந்திருக்காங்கன்னு சொன்னாங்க’ என்றேன்.

மீரா - ‘ப்ரெக்னண்ட்னு சொன்னா. 6 வாரமாவுதாம். அதுக்குத் தான் அவ மாமியார் ஊர்ல இருந்து வந்திருக்காங்க... அனேகமா நம்ம இரண்டு குடும்பத்தையுமே சாப்பிடக் கூப்பிடணும்னு சொன்னா....’. எனக்கு பாலா குடிப்பதை, இப்படி பெண்டாட்டியை தன் செயல்களால் வதைப்பதை அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமா என்று இருந்தது.

ஆனால் என்னவோ ஹைமா எங்களைக் கூப்பிட்டது ஆறு மாதங்கள் கழித்து. அதுவரை பணி மும்முரம், அது இது:-) என்று நானும் ஹைமாவிடம் பேசவில்லை. வீட்டுக்குப் போனால், ஹைமாவின் வயறு மேடிட்டிருக்கவில்லை. என்னைப் பார்த்ததும் அவள், ‘வாவ், கங்க்ராசுலேஷன்ஸ், எத்தனை மாசம்’ என்றாள். ‘ஹாய் ஹைமா, உனக்குக் கம்பெனி கொடுக்கலாம்னு நினைச்சேன், அஞ்சு மாசம்! உனக்கு என்ன ஆச்சுப்பா?’ என்றேன்.

என்னைக் கூர்ந்து பார்த்து விட்டு ‘அபார்ஷன் ஆயிடுச்சும்மா. நீ நல்ல செய்தி கொடுக்கும் இந்த வேளைல அது பத்திப் பேச வேண்டாம், வா, வந்து உள்ளே உட்காரு’ என்று கூப்பிட்டாள். பாலா, ராஜாமணியையும் மீராவின் கணவரையும் அழைத்துப் போய் ஆஃபீஸ் அறையில் உள்ளே பேசிக் கொண்டிருந்தார். ‘இன்டர்நெட் ரெவல்யூஷன் சார்! க்ளிக் மார்க்கெட்டிங்னு இது நான் ஒரு க்ளோபல் மார்க்கெட்டிங் கம்பெனில, வீட்டிலர்ந்தே வொர்க் செஞ்சிட்டிருக்கேன்! ஹைமாவுக்குத் தான் கம்ப்யூட்டர் பத்தி ஒண்ணும் தெரியல... எனக்கு அந்த வேலை போனதும் ஒரே கவலைப் பட்டா. நான் கூட சொன்னேன், ஒன் ஃப்ரண்ட்ஸை எல்லாம் கூப்பிடு, அவங்களே இது எப்படியாப்பட்ட வேலைன்னு கன்ஃபர்ம் செய்வாங்கன்னு! சொல்லுங்க’. இந்த பார்ட்டியும் விரைவிலேயே முடிந்தது - இந்த முறை மீராவின் கணவரும் என் கணவரும் அங்கிருந்து ஓடப் பார்த்தார்கள்.

கிளம்பும் முன்னர் ஹைமாவின் மாமியார் ‘குங்குமம் எடுத்துக்கோ’ என்றபடியே, மெல்லிய குரலில் ‘பாவம் ஹைமா, அவ திருப்பியும் கர்ப்பமா இருக்கான்னதும் அடுத்ததாவது ஆண்குழந்தையா இருக்கட்டும்னு நான் ரொம்ப சொன்னேன்! பும்சுவனம்லாம் கூட கோயில்ல இருந்து ஆள் கூப்பிட்டு செஞ்சுகிட்டா, அப்படியும் அது பொண்ணாயிருந்தது.... உனக்கு என்ன குழந்தைன்னு தெரியுமோ?’ என்றார். ‘ம், பொண்ணு தான். பாரதின்னு பேர் வைக்கப் போறேன்’.

Monday, February 16, 2009

புத்தக விமர்சனம்: The Palace Of Illusions - சித்ரா பானர்ஜி திவாகருனி

புத்தக விமர்சனம்: “The Palace Of Illusions” - சித்ரா பானர்ஜி திவாகருனி எழுதியது. இந்த புத்தகத்தை 2008இலேயே படித்து முடித்திருந்தாலும், நேரமின்மை காரணமாகவும், இதை அசை போட்டுப் பார்த்து அப்புறம் எழுதணும்னு தோன்றியதாலும் இப்பதான் விமர்சனம். எழுத்தாளர் சித்ரா இந்தியாவில் பிறந்த இன்றைய-அமெரிக்கவாசி. அவருடைய இணைய தளத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி மேலும் காண்க.

கதை ‘மஹாபாரதம்’ கதை தான். ஆனால், பாஞ்சாலியின் பார்வையில். இந்த புத்தகப்படி பார்த்தால், அந்த கதையே அவளுக்காக, அவளால், அவளைப் பற்றி என்பது போல! துருபத ராஜனின் சபதம் முடிக்கப் பிறந்தவள் அவள். அந்த சபத வலையில் வளர்பவளுக்கு, பிறந்த வீட்டு அரண்மனை அந்நியமாகவே படுகிறது. அர்ஜுனனை மணம் முடிக்கவே வளர்க்கப் படுகிறவள், மஹாபாரத கதையில் வெளிப்படையாய்க் காட்டப்படாத ஒரு திருப்பமாய் அவள் இன்னொரு குந்திமகனுடன் காதல்வயப்படுகிறாள்னு கதை போகுது. ஐவரையும் ஏன் மணக்கிறாள், அவள் மகாராணியாய் அனுபவிச்சு வாழ்ந்த ஒரே மாளிகை மாய மாளிகை, அதுக்கு என்ன ஆவுது, இறுதி வரை அவளுக்குன்னு ஒரு இடம் இல்லாத அலைக்கழிக்கப் படுவது, இந்த பகுதிகளெல்லாம் விறுவிறுன்னு போகுது. எழுத்தாளர், திரௌபதியை முடிந்த அளவு பெண்ணியப் பார்வையிலே சித்தரிக்கிறார்ங்கறதால படிக்க நல்லா இருந்தது.

உங்களுக்கு மஹாபாரதக் கதை நல்லா தெரிந்திருந்தாலோ, அல்லது தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலோ, கட்டாயம் இதைப் படிங்க. மஹாபாரதக் கதை எல்லாருக்கும் தெரியும் என்பதால், கதைபாத்திரங்களிலோ, குருக்‌ஷேத்திர போரில் வெற்றி வேற யாருக்கோ அப்படின்னோ மாத்திட முடியாது. ஆனால், திரௌபதிக்கு கிருஷ்ணர் உற்ற பால்ய நண்பராக இருக்கிறார். கதையோட அடிப்படை ஓடையோட போகும்போது, திடீர்னு ஒரு மந்திரக் கிழவி வந்து திரௌபதிக்கு வருங்காலத்தில அவள் படக்கூடிய துன்பங்களைத் தாங்குவதற்கான மந்திரத் தந்திரங்கள் சொல்லிக்குடுக்கறாங்க; வியாசர் அவங்களுக்கு உதவி செய்யப் பாக்குறார்.

செல்லப் பொண்ணான பாஞ்சாலியின் கோபம் பிரசித்தின்னுவாங்க. ஐவரை மணமுடித்ததால் கேலிக்குள்ளாகும் தன்னிலை ஒருநாளும் அவளுக்கு மறப்பதில்லை. இதில ஐவரை மணந்தாலும், ஒவ்வொரு வருடமும் ஒருவருக்கு மனைவியாய், கன்னியாக ஆகும் வரம் வேறு:-( தன் மேல உண்மையாய் காதல் கொள்ளும் பீமனை தன் உண்மை உணர்வுகளைக் காட்டாமல் எப்படி நடத்துகிறாள்னு நல்லாக் காட்டுகிறார் (பெண்) எழுத்தாளர்;-) மற்றவர் கைகளில் தன்னூழ் இருக்கேன்னு Angry Young Woman ஆகவே காலம் கழிக்கிறாள் பாஞ்சாலி. கதையில் ரொம்ப மாற்றம் முடியாதுன்னாலும், பெண்ணியம் தெறிக்கிறது.

முதலில் கதை எனக்கு சுவையாகப் படவில்லை; தொடக்கத்தில் ஓரிரண்டு இடங்களில் கதைத் தொடர்ச்சி சொதப்புது; மஹாபாரதக் கதைப் படியே குந்தி லேசுப்பட்டவங்க இல்ல! திரௌபதியின் கோபத்தில், அவள் அவசரக் குடுக்கைத்தனத்தில் மட்டும் விளைந்ததல்ல பாரதம். குந்தியினாலும்!!! குந்தி, சிறுபருவத்தில் தனக்குக் கர்ணன் பிறந்ததைச் சொல்லாமல் மறைக்கிறாங்க. அதோட, அவங்க கணவனுக்கு இரண்டாவது மனைவி மாத்ரி மேல தான் குந்தியைவிட விருப்பம் அதிகம்! குந்தி, தன் கணவனுக்குக் குழந்தை பிறக்காதுன்னதும் கூலா மூன்று குழந்தைகள் ‘வரமா வாங்கிக்கிறாங்க’. அர்ஜுனன் போட்டியில் திரௌபதியை வென்று வந்த போது, அதை அறியாமல் (?) குந்தி ‘நீங்க அஞ்சு பேரும் உங்க பரிசைப் பகிர்ந்துக்கணும்’னு சொன்னாலும், ‘அச்சோ, தெரியாம சொல்லிட்டேன், அடிச்சு கிள்ளி அதுமேல துப்பினா நான் சொன்னதை மாத்தின மாதிரி ஆயிடும்’ அப்படின்னு சொல்லியிருக்கலாம்; கதையில அப்பப்ப எண்ட்ரி கொடுக்கிற கிருஷ்ணர் இப்பவும் டகால்டி வேலை செய்திருக்கலாம். ஆனால், குந்தி ‘அஞ்சுபேரும் இணைஞ்சு இருக்கணும்; ஆளுக்கு ஒரு மனைவியை திருமணம் செய்தா வெவ்வேறு வழி போயிடுவாங்க, அதுக்குள்ள இப்படி பூட்டி வைக்கணுமி’ன்னு செய்த குறுக்குவேலை அது (என்பது என் தாழ்மையான கருத்து). அவங்களுக்கு இன்னும் இந்த கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். எது சொன்னாலும், கதையின் கடைசி இரண்டு பக்கங்கள் எனக்குப் பிடிக்கவேயில்லை - எழுத்தாளரின் கற்பனை முடிவு மட்டும் கதை ஓட்டத்துக்கும் பெண்ணியத்துக்கும் ஒவ்வாத கொடுமை.

மத்தபடி வித்தியாசமா, விறுவிறுன்னு இருந்தது. நீங்களும் கட்டாயம் படிங்க. உங்களுக்குப் பிடிச்சது/பிடிக்காதது எதுன்னு சொல்லுங்க!

Saturday, February 14, 2009

புரியாத பெண்கள் - 1

பாயல் மும்பையில் வளர்ந்த தமிழ்ப்பெண். அழகாய் அளவாய் இருப்பாள்; ஏற்ற உடைகள் அணிவாள்; அளந்து பேசுவாள். மறத்தமிழச்சியான எனக்கு, ‘தமிழ் உனக்குத் தாய்மொழின்னா, ஏன் பாய் கடை பாயான்னு பேரு வச்சிருக்காங்க உங்க அப்பா அம்மா?’ன்னு கூட கேக்க எனக்கு ஆசை தான். அவளை என் உயிர்த்தோழின்னு சொல்ல முடியாது - நான் பேசறதை கேட்டு சிரிச்சிட்டே இருக்கும் ஓரிருவர் தான் எனக்கு உயிர்த்தோழிகள்; பாயல் என் அருமைத் தோழிங்க மாலாவோ கீதாவோ மாதிரி இல்லை. (அவங்களைப் பத்தி இன்னொரு நாள் கட்டாயம் எழுதறேன்).

பாயல் ஒரு அமெரிக்க-நதிக்கரையோரம் ஒரு விழாவில தன் மகன், தன் பெற்றோரோட வந்திருந்தாங்க. அவங்க மகனும் என் மகனும் ஒரே வயது, நான் ஊருக்குப் புதிது, என் இரண்டாவது குழந்தைப்பேற்றுக்காக என்னைப் “பாத்துக்க” வந்த என் பெற்றோருக்கு அவங்க பெற்றோர் நண்பர்களாகலாமேனு பல காரணங்களால;-) நானா போய் பாயல் கூட பேசினேன். ஒரு புருவ உயர்த்தலோட அந்த காரணங்களைக் கேட்டுகிட்டு, உடனடியா ஒரு விஷயம் சொன்னாங்க - “நான் என் கணவரை விட்டு தனியாய் வாழறேன். விவாகரத்து கோர்ட்ல நடந்திட்டிருக்கு”னு. ஹலோ சொன்னவுடனே, எனக்கு முதுகுவலின்னு யாராவது சொல்வாங்களா என்ன! இன்னும் அவங்க சொன்னது - பாயலின் கணவன் அசோக் இந்தியாவுக்குத் திரும்பி விட்டான்; அடிக்கடி வந்து பாயலுக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள் பெற்றோர். அந்த சிறுவன் விக்ரம் என் கணவர் ராஜாமணியிடம் ஒட்டிக் கொண்டுவிட்டான்.

பாயல் சொன்ன விவரங்களிலிருந்து நான் புரிந்து கொண்டது: அமெரிக்காவில் பி.ஹெச்.டி. படித்த பெண்; ஒரு பெரும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்; சிலரின் விதியை, பலரின் நோயற்ற வாழ்வை உறுதி செய்யக்கூடிய உயர் ஆராய்ச்சியாளர். பெற்றோர் சொல்படி இங்கேயே பி.ஹெச்.டி. படித்த இந்திய ஒருவனை மணந்து, அவன் இவளைப் போல் திறமைசாலியாக இல்லாத காரணத்தால் அவன் கொடுத்த அத்தனை தொல்லைகளையும் பொறுத்துக் கொண்டிருந்தாள். விவாகரத்து வேணும்னு கேட்டு அவன் அவளிடம் சொன்ன காரணம் - கடல்கடந்து யோகா மூலம் நிம்மதியை விலைகூவி விற்ற ஒரு ‘ஞானி’யிடம் மாணவனானதாலாம்!

இன்னொன்று எனக்குப் புரிந்தது - லேட்டா! அப்பா,அம்மா சொன்ன பையனைப் பார்த்து பொய்யாய் வெட்கப்பட்டு, ‘பெண்பார்க்கும் படலத்தில் எல்லார் முன்னிலையில் அவனிடம் தைரியமா கேள்வி கேட்டேன்’னு தோழிகள்ட சொல்லி, பெண்பார்க்கப்பட்ட இரண்டாம் நாள் ‘அந்த பரிட்சையில்’ பாஸ் செய்துட்டு, மூன்றாம் நாள் கல்யாண ஷாப்பிங், நான்காம் நாள் ரிசப்ஷன், அஞ்சாம் நாள் கல்யாணம்னு நிறைய பெண்கள் அமெரிக்கா வந்துடறாங்க. மக்டனல்ட்ஸ்ல ‘ட்ரைவ் பை’ சாப்பாடு ஆர்டர் கொடுத்தவுடனே, சாப்பாடு வாங்கிட்டும் போகலாம் (கல்யாணம், விவாகரத்து கூட லாஸ் வேகஸ்-இல் ட்ரைவ் பை செய்யலாம்). இந்த ட்ரைவ் பை கலாசாரத்தில் வந்த பெண்களும் சரி, பெற்றோர்கிட்ட நல்ல பேர்வாங்க இப்படி கல்யாணம் செய்யும் பசங்களும் சரி, பொதுவா தனித்து வாழும் (மணமான / மணமாகாத) இந்தியப் பெண்களிடம் சரியாகப் பேசுவதில்லை!

பின்னர், அந்த ஊரில் எனக்கு அறிய வந்த பல இந்தியப் பெண்கள் பாயலிடமிருந்து விலகியே இருந்தார்கள். எங்க வீட்டு கொலுவுக்கு வந்த அஞ்சு, சித்ரா எல்லாருமே பாயல் கூட பேசலை. பாயல் என்னிடம் “சுமா, உன் பிள்ளை பிறந்தநாளுக்கு எத்தனை பேரை கூப்பிட்டே! என்பிள்ளை விக்ரம் பிறந்தநாளுக்கு ஃப்ரண்ட்ஸ் 2 பேர், உன் பிள்ளைன்னு மொத்தமே மூணுபேர் தான்...” என்று வருந்தினாள். “ஏன்? சிதாரா, ஷீபா பிள்ளைகளையும் கூப்பிடேன்!” என்றேன். “அசோக் அவங்களையெல்லாம் கூப்பிட வேண்டாம்னுட்டாரு... அவங்க ஹிந்து இல்லியே! நீ இங்க வந்தும் விடாது நம்மூர்முறையை பின்பற்றுகிறாய்னு அவருக்கு உன்மேல மரியாதை”. எனக்கு இது சாதி அபிமானம் என்று தான் தோன்றியது.

“அசோக் இங்க வந்திட்டாரா என்ன!?”

“இல்லை, கோர்ட் ரூலிங் படி இதுக்கெல்லாம் அவரிட்ட கேட்கணும்னு இல்லை. ஆனால் தந்தைங்கற முறையில் அவர் எல்லாத்திலியும் இன்வால்வ்ட் ஆக இருக்கணும் இல்லியா!”

இதற்குப் பின், என்னால் முடிந்த வரை நான் பாயலிடம் பேசுவதைத் தவிர்த்தேன். அவளுக்குச் சில கட்டாயங்கள் இருந்தன போலும். என் தாய் ஃபோனில் முதலில் கேட்டுக் கொண்டிருந்தார், “பாயல் எப்படியிருக்காள்? விக்ரம் எப்படியிருக்கான்? பாயல் அவ புருஷன் பத்தி ஏதாவது சொன்னாளா” என்றெல்லாம்... என் குழந்தைக்கு ‘பாரதி’ன்னு பேர் வைக்கிற கேரக்டர் நான், எப்படி பாயல் மாதிரி பெண்ணெல்லாம் பொறுத்துப்பேன்?

போனவாரம் பாயல் கிட்ட இருந்து ஒரு செயின் இமெயில் வந்திருந்தது: ‘இந்த இமெயிலை ஏழுபேருக்கு ஃபார்வர்டு செய்தால், பிள்ளையார் உன் மனதிற்கு இஷ்டமானதை கொடுப்பார்; அப்படிச் செய்யாவிடில், இல்லாத கொடுமையெல்லாம் நடக்கும்’னு. “பாயல், இனி இப்படிப்பட்ட இமெயிலை எனக்கு அனுப்பினால், எனக்கு வரும் மற்ற செயின் இமெயில்களை உனக்கு அனுப்புவேன்”னு ஒரு மெயில் தட்டி விட்டேன். “ஸாரி, எனக்கு இப்ப இருக்கும் மனக்கஷ்டத்தில, இப்படியாவது எனக்கு நல்லது நடக்குமான்னு செஞ்சுட்டேன். அப்புறம் சொல்றேன்”, என்று ஒருவரி மட்டும் ஒரு பதில் அனுப்பினாள். என்ன மனக்கஷ்டமோ, எனக்குத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை.

இந்த கதையை இன்னிக்கு எழுதுவதற்குக் காரணம், பாயலின் இன்னொரு இமெயில்: இரண்டு நாட்கள் முன் பாயலுக்குக் கல்யாணம் ஆச்சாம், அவள் (மாஜி) கணவனோடயே!

Friday, February 13, 2009

குழந்தை குறும்புகள்...

5வயது: “அம்மா, இந்த டைனாசார், பேய்களுக்கெல்லாம் பயப்படாமல் எவ்வளவு தைரியமா இருக்கேன்! இவ்வளவு வளந்த அப்பா இதெல்லாம் கற்பனை பண்ணக் கூட பயந்து அழுது ’வியர்டா’ இருக்காரே!” (குழந்தையோடு நானும் குழந்தை என்று ஆடும் அப்பாவுக்கு இதுவும் வேண்டும்! நிசமாவே, ‘வேண்டும்’னு சொல்ற ஆள்!)

****************************************************

எனக்கும் வேண்டும் வானவில்

உன்னோடு தான் இருந்தேன்.
நீ அணிந்த கொலுசு போல்
நானும்.
நீ தேடி எடுத்த அட்டைப்பெட்டிபோல்
எனக்கும்.
நீ விளையாடப் பிடித்த ஒரு கப் தண்ணீர்
எனக்கும்.

ஆனால், உன் கொலுசில் வரும் இசையோ,
உன் அட்டைப்பெட்டிக்குள் மறைந்திருக்கும்
மந்திர முயலோ,
உன் கப் தண்ணீரில் உனக்கு மட்டும்
தெரியும் வானவில்லோ
ஏன் எனக்குக் கிடைப்பதில்லை?

****************************************************

உங்கள் ஒவ்வொரு மழலைச் சிரிப்பாய், விளையாடும் கற்பனைகளாய், நீங்கள் விரும்பி உண்ணும் தீனியாய்க் கூடவே இருக்கவே விருப்பம்.

****************************************************

2009-இன் அன்பர் தின வாழ்த்துகள். என் அன்பனுக்கும்.

Friday, February 06, 2009

பத்திரமாய் ஞாபகங்கள்

ஞாபகங்களின்
இழைகளில் என் அதிர்ச்சிகளும் பயங்களும்.
காணாமல் அடிக்கப்பட்ட
கனவுகளைக் கட்டிப்போட்டு
கதிர்/நிலா மின்னும் காவிரிவிழிகளில் புதைத்தாயிற்று.
சுழித்துப் போகிற நீரில்
தவித்து இறந்த தோழி/ழனின் கடைசிக்காட்சி
காணாமலே போகத்தான்
நான் ஞாபகங்களைக் கொன்று கொள்கிறேன்.
(ஏனெனில் அந்தத் தோழி/ழனும் நானேதான்).

மறவாது பிள்ளையார் சுழி போடாமல்
எழுதத் தொடங்கினாலும், மறந்து
நினைவுகளைக் கோர்த்து விடுகிறேன்.
புரிந்த கோடுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன
ஞாபகங்கள்.

அறிந்து கொன்ற அன்றில்களையும்
காற்பெருவிரலால் மடித்த தொட்டாற்சுருங்கிகளையும்,
தீப்பெட்டிகளுக்குள் தட்டான்பூச்சிகளோடு
(வைத்துக்கொள்கிறேன்)
பத்திரமாய், ஞாபகங்களின் இழைகளுக்கப்பால்
வெகு பத்திரமாய்.

Wednesday, February 04, 2009

கொழுப்பு?

குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கொணர
(ஓர் அமெரிக்க) ஹைவேயில் நான் அவசரத்தில்!
முன்னே டப்பா-காரில் ஒர் இந்திய இளைஞன்
புதிதாய் ஓட்டும் அச்சத்தில் மெதுமெதுமெதுமெதுவாய்....
எட்டிப்பார்த்தால், கோடம்பாக்கம் ஹைரோட்டில்
என் இருசக்கரவண்டியை
இடித்து எக்களித்தவன் நினைவு வர...
அவசரமாய் என் உயருந்தால் இடிப்பதுபோல் போய்
ஓவர்டேக்!

கடைசி இரண்டு வரிகள் மட்டும் "நிஜம்-போல்":-)

உயருந்து = SUV

Sunday, February 01, 2009

ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க!

இந்தியத் தேர்தல் விதிகளின் படி, “எனக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை, ஆனால், என் பேரில் கள்ள ஓட்டு விழுவதைத் தடுக்க விரும்புகிறேன்”னு சொல்லறது 49-ஒ (1). இது பத்தி ஞாநி ("ஒரு வேட்பாளரையும் பிடிக்காட்டி 49ஓ போடு, எப்படியும் ஓட்டு போடு" அப்படின்றாரு) புண்ணியத்தில நிறைய பேரு எழுதியிருக்காங்க. இன்றைய தேதியில் 49ஓ படி ஓட்டுப் போடாம நம்ம கடுப்பைக் காட்டிட்டு வர்றதுன்னால யாருக்கு லாபம்? அரசியல்வாதிகளுக்குத் தான்! நீங்க ஞாநியுடைய ஒரிஜினல் வாதம் பாத்தீங்கன்னா, 49ஓ போட்டால், அதே வேட்பாளர்கள் திரும்பி அடுத்த முறை தேர்தல்ல நிக்க மாட்டாங்க (நிறுத்தப்பட மாட்டாங்க?) என்று சொல்றாரு. ஏங்க, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரெல்லாம் தேர்தல்ல நிக்கறாங்க!!!

49ஓவினால, யாருக்கு ஓட்டுப் போடறோம்/போடலைங்கிற ரகசியம் ஒடைஞ்சுடுது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டுமுறை நம்முடைய வோட்டு முறையை மாற்றக் கோரியிருக்கிறது. தேர்தல் வோட்டு போடும்போது "மேற்கூறியவர்களுக்கு வோட்டளிக்க
விருப்பமில்லை" ன்னு கூட மக்கள் வோட்டிட வழி செய்யணுமாம். இன்னும் இது சட்டமாகலை.(2). இதுபத்தி எழுதினா, உ.த.பதிவுமாதிரி நீளமாயிடும் (அவர் பதவி காலியாயிட்டிருக்காம்ல!)

குண்டுக்கல் மாவட்டத்தில வோட்டுப்பட்டியில் கதைத்தேர்தல் நடந்ததுன்னு வச்சுக்குவோம்; அ) சாதியான் ஆ) துட்டான் இ) ரெண்டுங்கெட்டான்னு மூணு பேரு போட்டியிடறாங்க. 1000 பேர் வோட்டு போட்டாங்க (மிச்சம் பேர் சினிமாவுக்குப் போனாங்க). 1000 பேர்ல 900 பேர் (அவிங்க 900 பேரும் "வோட்டுப்பட்டி ஞாநி" கல்லூரி முதுகலை மாணவர்கள்), பூத் ஆபிசர் கையைக் காலைப் பிடிச்சி, கடைசியில் மிரட்டி போராடி (3) 49ஓ மூலமா வோட்டு போட விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க. இந்த நூறு பேரு போட்ட வோட்டுல ரெண்டுங்கெட்டான் ஜெயிச்சாரு. ஞாநி சொல்வது என்னா: இவ்வளவு பேரு ஓட்டு போடலைன்னு கட்சிகளுக்கு தெரியுமாம். கறி பிரியாணி செலவு 100 பேருக்குத் தானே?

49ஓவை பெரும்பான்மை (100% என்பது இயலாது!) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா? பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு எதிர்பார்த்த செலவு 818கோடி. தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில! தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி. வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது? தேர்தல் போது, எந்தத் தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க. அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் "ஆதரவாளர்கள்", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் தான்! எல்லா நாடுகளிலும் தேர்தல் ஊழல்கள், லஞ்சம் எல்லாம் உண்டு. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தொழிலதிபர்ங்கற ரீதியில் டொனேஷன் கேட்டு ஃபோன்கால் வந்தது, இது சகஜம்!!

உருப்படியா இரண்டு யோசனைகள் (நடைமுறைச் சிக்கல்கள் உண்டு):
1. ஓட்டுப் போடுவது சில நாடுகளில் கட்டாயம் (சுட்டியில இதுக்கான வாத/எதிர்வாதங்கள் இருக்கு). அதுபோல், திண்மையுள்ள இந்தியக் குடிமக்கள் எல்லாரும் வோட்டுப் போடணும்னு ஒரு சட்டம் வேணும். அட்லீஸ்ட், வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்களுக்கு தபால் ஓட்டுப் போடுவதை வழிமுறைப் படுத்தலாம் இல்லையா? படிச்சவங்க குறைவா ஓட்டுப் போடறாங்களாம் (4). பத்தாவது முடிச்சவங்க ஓட்டுப் போடலைன்னா, ரூ.10,000 வரை தண்டம் கட்டணும்னு வைக்கலாமே, அடுத்த எலக்‌ஷனுக்காவது பணம் சேரும்.

2. நாட்டைத் திருத்த இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் குழுவா அமைச்சு தேர்தலுக்கு நிக்கலாம். (அருண்குமார் பதிவில எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சி பற்றி எழுதியிருக்காரு). தேர்தலில் வென்றவர்களுக்கு சட்டத்துக்கு மீறி வருமானம்/இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்தால், வென்றவர் பதவி துறக்கணும்னு அந்த குழு கறாரா நடைமுறைப்படுத்தணும்.

ஒவ்வொரு இந்தியத் தேர்தலும்போதும் வந்து 49ஓ போடுன்னு சொல்லாம, இடைப்பட்ட நேரத்துல நல்ல வேட்பாளர்களை உருவாக்கப் பாக்கணும். வேட்பாளர்களுக்கு வோட்டு போட விருப்பமில்லை என்பது, சனநாயக அடிப்படைக்கு எதிராகவா என்றும் ஒரு கேள்வி இருக்கு. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல்ல மக்கள் பங்கேற்கணும் (அய்யோ சிரிக்காதீங்க;-( குறிப்பிட்ட நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், தேர்தலுக்குப் பின்னரே கட்சிக்கு டொனேஷன் தருவோம்னு மக்கள் உறுதி தர்றதுன்னு கூட வழிகள் இருக்கு. ஓ-போடு இயக்கத்தில், படிச்சவங்களை டார்கெட் செய்யறாங்க; படிக்காதவங்க ஓட்டு போடுறது எதுக்குன்னு முதல்ல புரிஞ்சுக்கணும். அட்லீஸ்ட் நம்மூரில் இருக்கிற சட்டங்களை அமல்படுத்துவதிலும் சட்டங்களைப் பற்றின உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும் தான் நம்மைப் போன்ற படித்த ஞாநிகள் ஒத்துழைக்க வேண்டும்.

தரவு/சுட்டிகள்:
1. இந்தியத்தேர்தல் விதிகள் இங்கே.
2. தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகள் இங்கே.
3. தேர்தல்களில் 49ஓ போடுவதில் பதிவர்கள் பட்ட நடைமுறைச் சிரமங்கள்: வித்யா, ஊர்சுற்றி, அருண்குமார்.
4. பத்ரி சார் பதிவிலே கிராமத்தை விட பெரிய நகரங்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவுன்னு விழுக்காட்டோட!


Saturday, January 17, 2009

கனம் கோர்ட்டாரே, நடந்த கொலைக்கு சாட்சியாக குற்றவாளியின் மூளை-மின்னலைகள்!

மளிகைக் கடைக்காரர் பழனிச்சாமி நம்ம பக்கத்து வீட்டுக்காரர் மருதைக்கு அளந்து எடுத்த சக்கரையிலிருந்து, மருதை பாக்காத போது கொஞ்சம் எடுத்து பழன்ஸ் உள்ளே போட்டுக்கறாரு. நாம பேசாம இருக்கோம். இதுவே, நமக்கு அளக்கிற சக்கரைன்னா பழன்ஸ் எடுத்துக்குவாரோன்னு கண்கொட்டாம பாக்கிறோம். நீதி, அநீதின்னு நம்ம மூளை எப்படி யோசிக்குது? நீதிமன்றத்திலோ, தினப்படி வாழ்க்கையிலோ, நீதி வழங்குவது எது? மூளை இதை எப்படி தீர்மானிக்குது? சட்ட வல்லுனராயில்லாத சாதாரண மனுஷன் ஒரு ஜூரராக (1) எப்படி குற்றத்தைக் கண்டுகொள்கிறார்?

இது பற்றி உலகம் முழுக்க பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மூளையிலுள்ள பல்லாயிரக்கணக்கான நுண்ணிய‌ செல்கள் தம்முள் இது சரி இது தப்புன்னு தீர்மானிக்கும் போது அதை ஸ்கான் செய்து (வருடி) பார்த்தா, மூளையின் எந்த பாகங்கள் நீதி/அநீதின்னு தீர்மானிக்குதுன்னு தெரிஞ்சுக்க வாய்ப்பு தானே! என்னது?! அதாங்க, மூளை மின்னலை வருடின்னு ஒரு கண்டுபிடிப்பு; ஒரு குற்றம் நடக்கும் போது, கேட்ட சப்தம், அந்த குற்றத்தைப் பத்தி குற்றவாளிக்குக் குறிப்பா தெரிந்திருக்கக் கூடிய விவரங்கள்... இதை குற்றவாளின்னு கருதப்படுபவர் கிட்ட சொல்ல வேண்டியது; அவருடைய மூளையின் சில பகுதிகளை இதை 'அட, ஆமா, அப்படித்தானே நடந்தது'ன்னு அடையாளங் கண்டு கொள்ளுதா? அப்படின்னா, இந்த குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியம்!!!

அமெரிக்காவின் நாஷ்வில் (டென்னஸி மாநிலம்)இல் உள்ள‌ வென்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பேராசிரியர் ஓவன் ஜோன்ஸ், நியுரோஅறிஞர்கள் ரெனெ மாரொய்ஸ், ஜாஷ்வா பக்ஹோல்ட்ஸ் இவர்கள் 16 தன்னார்வலர்களை சட்டத் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் போது fMRI (functional Magenetic Resonance Imaging) செய்து மூளையின் எந்த பாகங்கள் எப்படி இயங்குது, நியாயம் அநியாயம் தீர்மானத்தின் போது மூளை எப்படி இயங்குதுன்னு கடந்த வருடத்தில் - 2008 - ஆராய்ச்சி செய்துருக்காங்க (2). இவங்க ஆராய்ச்சியை குற்றம் சாட்ட பயன்படுத்தலை. ஆனா, இதே ஆராய்ச்சி வகையில், ஒரு மூளை அலை வருடி கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார், இந்தியா பெங்களூரு நிம்ஹான்ஸில் முன்னாள் க்ளினிகல் சைகாலஜி தலைவர்/பேராசிரியர் திரு. சம்பாதி ராமன் முகுந்தன் - அது பேரு BEOS (Brain Electrical Oscillations Signature test).

இதுல உலகைக் கலக்கும் நியுஸ் என்னான்ன சமீபத்தில், (அ) மஹாராஷ்ட்ரா புனேஇல், MBA மாணவி அதிதி ஷர்மாவுடைய பழைய காதலர் உதித் பாரதி, விஷங் கலந்த 'பிரசாதம்' சாப்பிட்டு இறந்தார். இதுல அதிதி, அவரோட இன்னாள் காதலர் ப்ரவீன் க்ஹான்டெல்வல் இவங்க சம்பந்தப்பட்டிருக்கலாம்னு அதிதியை 'பொய் அறியும் கருவி'யில சோதிச்சிருக்காங்க. அது தவிர‌ அந்த குத்தம் பத்தி விவரங்களைப் படிக்க படிக்க, அந்தம்மாவின் தலையில‌ BEOS வச்சு மூளை அலைகளை வருடி - 32 எலக்ட்ரோடு கொண்ட தொப்பி போட்டு, காதுல எலக்ட்ரோடு மாட்டி.. - கண்டதில், அந்தம்மாவுக்கு குத்தம் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க‌; (ஆ) மும்பையை சேர்ந்த பான் கடைக்காரர் அமின் ப்ஹோய், தன்கூட பணிபுரிந்த ராம்துலார் சிங்கை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட‌ கேஸிலும் BEOS ஐ பயன்படுத்தியிருக்காங்க. ரெண்டு கேஸ்லயுமே BEOS மட்டுமில்லாத சூழ்நிலைக் காரணங்களிலாலும் இரண்டு பேரையுமே குற்றவாளியாக இரு வேறு நீதிமன்றங்கள் சொல்லியிருக்கு. ஆனால், இந்த வருடி இயந்திரத்தை கண்டுபிடித்த திரு. முகுந்தன் முன்னாலே பணிபுரிந்த பெங்களூரு நிம்ஹான்ஸ்ஐச் சேர்ந்த இன்னொரு நியுரோ அறிஞரையும் (அப்படிப் போடு அருவாளை!) கொண்ட ஒரு குழுவே வருடியை வச்சு குற்றம் காணும் வழிமுறையை இப்போதைக்கு சட்டரீதியா பயன்படுத்த வேணாம்னு சொல்லியிருக்காங்க.

ஏன்? ஆராய்ச்சிக்கான / இந்த வருடியின் வழிமுறைகளில் குற்றம் இருக்கலாம்ங்கறாங்க. நிறைய மூளைகளின் நுண்ணலைகளை, புள்ளியியல் ஆய்வு மூலம் ஒப்புநோக்கி, இன்னும் எப்ப எப்ப என்னா மாறுதல் நடக்குதுன்னு அறிந்தால் தான் இந்த ஆராய்ச்சி முழுமை பெறும். இதுலியும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரி செயல்பட்டாலும், கொலைக்குற்றச்சாட்டு போன்ற உக்கிரமான சூழ்நிலையில் மனிதனின் உணர்வுகளும் அதனால் மூளையும் ஒரே மாதிரி தான் செயல்படும்னு எப்படி ஒப்புக்கறது? இந்த ஆராய்ச்சி தொடங்கி கொஞ்ச காலம் தான் ஆகியிருந்தாலும் இதன் பேரில் ஒருவரைக் குற்றம் சாட்டுவது சரிதானா? இந்த ரீதியில போனம்னா, வருங்காலத்தில‌ நீதியிலிருந்து, சாதாரண நட்பு வரைக்கும் என்னவெல்லாம் ஆகலாம்! இன்னபிற.

தரவுகள்
(1). இந்தியாவில் ஒரு வழக்கு நடக்கும் போது, நீதிபதியோ, நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்'ஓ விசாரிக்கும். அமெரிக்காவில், நம்மூர் பஞ்சாயத்து ஸ்டைல்ல 'ஜூரி' எனப்படும் மக்களால் ஆன நீதிக்குழுவும் நீதி வழங்கலாம். அமெரிக்கக் குடிமக்களுக்கு மட்டும் அனுமதி; யார் ஜூரர் ஆக இருக்கலாம்னு கேள்வி/சோதனை எல்லாம் செய்து வழக்குரைஞர்கள் தீர்மானிக்கலாம். இன்னும் இணையத்தில்

(2) இது அமெரிக்காவில் புகழ் பெற்ற தனியார் புரவலர் (charity) ஜான் டி. & காதரின் றி. மக்ஆர்தர் கழகம் வழங்கிய நிதியுதவியின் பேரில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற (எனக்கும் பிடித்த) ஸன்ட்ரா டே ஓ'கானர் மற்றும் ஸான்டா பார்பரா கலிஃபோர்னிய பல்கலையைச் சேர்ந்த நியுரோ அறிஞர் மைக்கல் கஃஜானிகா (Gazzaniga) இவர்களால் நிர்வாகிக்கப்படும் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய 10மிலியன் டாலர் (ஆராய்ச்சிக்கு இது ரொம்ப ஜுஜுபி) ஆராய்ச்சித்திட்டம்.

(3) நியுயார்க் டைம்ஸ்
(4) டைம்ஸ் அஃப் இன்டியா
(5) படம், செய்தித் தலைப்புக்கு நன்றி: வால்ஸ்ட்ரீட் ஜர்னல்
(6) http://www.nowpublic.com/world/indian-court-allows-brain-scan-evidence
(7) http://www.privacylives.com/india-brain-scan-can-be-evidence-of-guilt/2008/09/25/

Friday, January 16, 2009

தேடல்...

தொடராய்ப் போகும் தேடலுக்கு
'முற்றுப்புள்ளி' மூன்று முறை.
அதுவாய் இதுவாய்,
நேரத்துக்கு ஒவ்வொன்றாய்த்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
எப்போதும் தேடுவதற்கு
ஒன்று இருந்து கொண்டிருக்கிறது.
இல்லாவிடில் என்னாவேன்?

எண்ணச்சரம் பற்றி பழைய தேடலுக்கு
மீண்டும்.
மௌனம் மூடியது என் தேடல்,
என்றைக்காவது அது ஏன்
என்று எனக்குத் தெரியும் வரை...